Published : 25 Sep 2020 08:30 PM
Last Updated : 25 Sep 2020 08:30 PM

பீட்டர்ஸ் காலனி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு; கட்டாயப்படுத்தி காலி செய்ய முயற்சி: மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

வீட்டு வசதி வாரியக் குடியிருப்பைக் காலி செய்யக் கட்டாயப்படுத்தி மின் இணைப்பு, குடிநீர் இணைப்பை அதிகாரிகள் துண்டிப்பதாக அளிக்கப்பட்ட புகாரில் தமிழக வீட்டு வசதித் துறை அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பீட்டர்ஸ் காலனியில் உள்ள 342 குடியிருப்புகளில் அரசு அலுவலர்கள், நீதிமன்ற ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள் உள்ளிட்டோர் குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில் குடியிருப்பை இடித்துவிட்டு வணிக வளாகம் கட்டுவதற்காக பீட்டர்ஸ் காலனியில் குடியிருப்போரை, குடியிருக்கத் தகுதியில்லாத லாயிட்ஸ் காலனி குடியிருப்புக்கு மாற்றக் கட்டாயப்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

வீட்டு வசதி வாரியத்தின் செயற்பொறியாளர் காந்தி, பீட்டர்ஸ் காலனியில் தங்கியிருப்போரைக் காலி செய்யத் தொடர்ந்து மிரட்டுவதாகவும், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பையும் துண்டித்து மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகவும் பீட்டர்ஸ் காலனி குடியிருப்போர் நலச்சங்கத்தின் செயலாளர் முத்துச்செல்வன் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு அளித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணையப் பொறுப்புத் தலைவர் துரை.ஜெயச்சந்திரன், தமிழக அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளர், வீட்டு வசதித் துறையின் நிர்வாக இயக்குனர் ஆகியோர் இதுகுறித்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x