Published : 25 Sep 2020 01:21 PM
Last Updated : 25 Sep 2020 01:21 PM

ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் திமுக தலைவர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொறுப்பாளராக இருந்த முகுல் வாஸ்னிக் மாற்றப்பட்டு கர்நாடகாவைச் சேர்ந்த தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் திமுக கூட்டணியில் பிரதான கட்சியாக காங்கிரஸ் உள்ளது.

மாநிலப் பொறுப்பாளராக நியமிக்கப்படுபவர்கள் கூட்டணிக் கட்சியான திமுக தலைவரைச் சந்திப்பது வழக்கமான ஒன்று. அதன் அடிப்படையில் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சந்தித்தார். அவருடன் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா ஆகியோர் வந்தனர்.

அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினுடன் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் இருந்தனர்.

ஸ்டாலினுடன் அனைவரும் ஆலோசனை நடத்தினர். தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தனர்.

பின்னர் தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''திமுக ஆட்சி அமைக்க, ஸ்டாலின் முதல்வராக அமர காங்கிரஸ் துணை நிற்கும்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x