Published : 25 Sep 2020 01:11 PM
Last Updated : 25 Sep 2020 01:11 PM

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக செப்.28 அன்று கண்டன ஆர்ப்பாட்டம்: காங்கிரஸ் கட்சியினருக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக செப். 28 அன்று நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என, அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (செப். 25) வெளியிட்ட அறிக்கை:

"மத்தியில் அமைந்துள்ள பாஜக அரசு தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வருவதை உறுதிப்படுத்துகிற வகையில் சமீபத்தில் விவசாயிகளுக்கு விரோதமான அவசரச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைக்கிற வகையில் மாநிலங்களவையில் வாக்கெடுப்பு கூட நடத்தாமல் குரல் வாக்கெடுப்பு என்ற போர்வையில் அவசரச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது.

விவசாய விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், அதற்குத் துணை போகும் அதிமுக அரசைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 28 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவதென சமீபத்தில் திமுக தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி, செப்டம்பர் 28, திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மாவட்டத் தலைநகரங்களிலும், நகராட்சி மற்றும் ஒன்றியங்களிலும் கரோனா பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்து தனிமனித விலகலோடு அனைத்துக் கட்சிகளின் சார்பில் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அனைத்துக் கட்சி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் வெற்றி பெற மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டணிக் கட்சியினரோடு இணைந்து அனைத்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் சிறப்பாகச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x