Published : 25 Sep 2020 11:58 AM
Last Updated : 25 Sep 2020 11:58 AM

மத்திய அரசின் வேளாண் சட்ட எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் 

விவசாயிகள் மற்றும் பொதுமக்களைப் பாதிக்கும் புதிய வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு தமிழகம் முழுவதும் போராட்டம் சாலை மறியல் போராட்டத்தை நடத்துகிறது.

மத்திய அரசு வேளாண்துறை சார்ந்த மூன்று சட்டங்களை நிறைவேற்றியது. மூன்று சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளை “கருப்பு ஞாயிறு” என விவசாயிகள் சங்கங்கள் அழைக்கின்றன. இந்தச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் இந்திய விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் எவ்விதப் பாதுகாப்பும் இருக்காது. முழுக்க முழுக்க பன்னாட்டு நிறுவனங்களையும், உள்நாட்டுப் பெருநிறுவனங்களையும் சார்ந்து வாழ வேண்டிய அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவர். இந்த மிக மிக மோசமான பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகள், சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த தமிழக அரசையும், முதல்வரையும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

விவசாயிகள் மற்றும் பொதுமக்களைப் பாதிக்கும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு செப்டம்பர் 25-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் சாலை மறியல் மற்றும் சட்ட நகலெரிப்புப் போராட்டம் நடத்திட அறைகூவல் விடுத்திருந்தது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அனைத்து மாவட்டங்களிலும் சாலை மறியல் போராட்டத்தை நடத்த முடிவு செய்து அறிவித்திருந்தனர். இந்நிலையில் வேளாண் மசோதாவை எதிர்த்து இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மாவட்டத் தலைநகரங்கள், நகராட்சிகளில் விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டம், சாலை மறியல் நடந்து வருகிறது. தாம்பரத்தில் நடக்கும் விவசாய சங்க ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

வண்ணாரப்பேட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் போராட்டம் நடக்கிறது.

தமிழகம் முழுவதும் நடக்கும் விவசாயிகள் சங்கப் போராட்டத்தில் விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர்களுடன் இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர். வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டம் அகில இந்திய அளவில் தீவிரமாக நடந்து வருகிறது.

தற்போது ட்விட்டரில் #NoToFarmBills ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x