Published : 24 Sep 2020 07:08 PM
Last Updated : 24 Sep 2020 07:08 PM

மதுரை விமானநிலைய ஓடுதள புனரமைப்புப் பணி தொடக்கம்: 10 ஆண்டுகளுக்குப் பின் ரூ.20 கோடி செலவில் சீரமைப்பு

மதுரை 

மதுரை விமானநிலைய ஓடுதளத்தைப் புனரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.20 கோடி செலவில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

பொதுவாக விமானநிலையங்களில் விமானங்கள் வந்து தரையிரங்கும் ரன்வே (ஓடுதளம்) சேதமடையவும், அதில் ரப்பர் கழிவுகள் ஓட்டிக் கொள்ளவும் வாய்ப்புள்ளது.

ஆகையால் ஓடுதளத்தைப் பராமரிக்காவிட்டால் விமான நிலையத்தில் விமானங்கள் தரையிரங்கும்போதும், மேலே பறக்க ரன்வேயில் செல்லும்போதும் விபத்துக்குள்ளாக நேரிடும்.

அதனால், 10 ஆண்டிற்கு ஒரு முறையாவது ஓடுதளம் புனரமைக்கப்படும். மதுரை விமானநிலையத்தின் ஓடு தளம் பராமரித்து 10 ஆண்டாக்கு மேல் ஆகிவிட்டது. கடைசியாக 2007 இந்த பராமரிப்பு நடந்தது.

அதனால், தற்போது விமானநிலையத்தின் ரன்வே ரூ.20 கோடியில் புனரமைக்கும் பணிகள் தொடங்கி நடக்கிறது. மதுரை விமானநிலையத்தின் ரன்வே 7,500 அடி நீளமுள்ளது.

தற்போது இந்த ரன்வேயை சுரண்டி த்ரி லேயர் அடிப்படையில் அதற்கு மேல் புதுஓடுதளம் அமைக்கப்படுகிறது. இதற்காக விமானசேவை பாதிக்கப்படக்கூடாது என்பதால் விமானசேவை இல்லாத இரவு நேரத்தில் இப்பணிகள் நடக்கிறது.

இதுகுறித்து, மதுரை விமானநிலைய இயக்குனர் செந்தில் வளவன் கூறுகையில், ‘‘விமானநிலையத்தின் ஓடுதளம் ஆங்காங்கே சில இடங்களில் சேதம் அடைந்து இருக்க வாய்ப்புள்ளது.

அவற்றை சீரமைக்க வேண்டும். அதற்காக இப்பணிகள் நடக்கிறது.

இதற்காக ஓடுதளத்தைப் பராமரிக்கும் தனிதொழில்நுட்ப குழுவினர் வந்து இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதனால், விமானசேவை பாதிக்கப்படாது. அதற்கு தகுந்தாற்போல் இப்பணிகள் நடக்கிறது, ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x