Published : 24 Sep 2020 06:36 PM
Last Updated : 24 Sep 2020 06:36 PM

முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பத்திற்கு மழை தண்ணீர் வரவில்லை நடப்பாண்டும் நிலை தெப்ப உற்சவம்தானா?

முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் பிரசித்தி பெற்ற மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்திற்கு இன்னும் மழை தண்ணீர் வரவில்லை.

அதனால், தண்ணீரில்லாமல் காணப்படும் நிலைதெப்பத்தில்தான் இந்த ஆண்டும் கோயில் தெப்ப உற்சவ விழா நடக்க வாய்ப்புள்ளதால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்.

மதுரை டவுன் ஹால் ரோட்டில் உள்ள கூடலழகர் பெருமாள் கோயில் சிறப்பு வாய்ந்தது. வரலாற்று முக்கியத்தும் பெற்ற இந்த கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம், கோயில் உருவான காலத்தில் இருந்தே உள்ளது.

1960-ம் ஆண்டு வரை இந்த கோயில் தெப்பக்குளத்தில் தெப்பஉற்சவம் தண்ணீரிலே விமர்ச்சையாக நடந்தது. அதன்பிறகு கோயில் நிர்வாகம், வணிக நோக்கில் தெப்பக்குளத்தை சுற்றிலும் கடைகளை கட்டி வாடகைக்குவிட்டதால் தெப்பக்குளத்திற்கு வரும் மழை தண்ணீர் தடைப்பட்டது.

மேலும், காலப்போக்கில் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாய் நகர்ப்பகுதியில் ஆங்காங்கே ஆக்கிரமிக்கப்பட்டது. அதனால், தெப்பக்குளம் தண்ணீரில்லாமல் கடந்த 60 ஆண்டுகளாகவே வறண்டு முட்புதர்கள் மண்டி பராமரிப்பு இல்லாமல் காணப்பட்டது.

தற்போது தெப்பக்குளத்தை சுற்றிலும் உள்ள கடைகள் அகற்றப்பட்டு, தெப்பக்குளத்திற்கு நிரந்தரமாக தண்ணீர் வருவதற்கு இந்து அறநிலையத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

ஆனால், இப்பணி பாதியில் நிற்பதால் தெப்பகுளத்தை மீட்கும் நடவடிக்கை தடைப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன்பே மாநகராட்சி நிர்வாகம், தெப்பக்குளத்திற்கு பெரியார் பஸ்நிலையம் பகுதியில் தேங்கும் மழைநீரை கொண்டு வர நடவடிக்கை எடுத்தது.

அதனால், மாநகராட்சியின் மழைநீரை கொண்டு வரும் நடவடிக்கை தோல்வியில் முடிந்தது. மீண்டும் கூடழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளம் வறண்டு காணப்படுவதால் இந்த ஆண்டும் வழக்கம்போல் கூடலழகர் பெருமாள் கோயில் திருவிழாவில் தெப்பஉற்சவம் நிலை தெப்பமாக நடக்கவே வாய்ப்புள்ளதாக பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x