Last Updated : 24 Sep, 2020 05:52 PM

 

Published : 24 Sep 2020 05:52 PM
Last Updated : 24 Sep 2020 05:52 PM

மணல் கொள்ளையர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யாதது ஏன்?- நெல்லை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

நெல்லை மாவட்டம், அம்பையில் பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் அளவுக்கு நடைபெற்றுள்ள மணல் கொள்ளையில் தொடர்புடையவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யாதது ஏன்? கொள்ளைக்கு உதவிய உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை அம்பாசமுத்திரத்தில் எம்-சாண்ட் குவாரிக்கு அனுமதி பெற்று சட்டவிரோத மணல் குவாரி நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சிவசங்கரன், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. நெல்லை மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோர் காணொலி வழியாக நீதிமன்றத்தில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தனர்.

அதில், எம்-சாண்ட் குவாரிக்கு அனுமதி பெற்று சட்டவிரோதமாக மணல் குவாரி நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள், பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் அளவிற்கு மணல் கொள்ளை நடைபெற்றுள்ளது. இந்தளவுக்கு மணல் கொள்ளை நடைபெறும் வரை மாவட்ட நிர்வாகம் என்ன செய்து கொண்டிருந்தது? பல்லாயிரம் டன் மணல் கொள்ளை நடைபெற்றது தெரிகிறது.
இவ்வளவு மணல் கொள்ளை நடந்துள்ள நிலையில் கிராம நிர்வாக அலுவலர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தது ஏன்? இவ்வளவு பெரியளவில் மணல் கொள்ளை நடைபெற வருவாய், காவல் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்திருப்பார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? எவ்வளவு டன் மணல் கொள்ளையடிக்கப்பட்டது? மணல் கொள்ளையில் தொடர்புடைய எத்தனை லாரிகள், பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன? எத்தனை பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது? அவர்களில் எத்தனை பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்? குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படாவிட்டால் அதற்கு என்ன காரணம்?

மணல் கடத்தலில் தொடர்புடைய வாகனங்களை பறிமுதல் செய்யவும், மணல் கடத்தலில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டும், அந்த உத்தரவு அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் ஏன் நடவடிக்க எடுக்கவில்லை? என சரமாரி கேள்வி எழுப்பினர்.

இதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர், மணல் கொள்ளைக்கு உதவிய கனிமவளத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையடுத்து இந்த வழக்கில் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு நெல்லை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்.11-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x