

பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி,எம்.பி.சி, டி.என்.சி) மாணவ, மாணவியர் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது தொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி,எம்.பி.சி, டி.என்.சி) மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்களை, அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று புதுப்பித்தல் இனங்களை வரும் 10.11.2020-ம் தேதிக்குள்ளும், புதியது இனங்களுக்கு 30.11.2020-ம் தேதிக்குள்ளம் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும் மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு விவரங்களை தவறாது குறிப்பிடவேண்டும்.
சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை 15.12.2020-ம் தேதிக்கு முன்பும், புதியதிற்கான விண்ணப்பங்களை 31.01.2021-ம் தேதிக்கு முன்பும் இணையதளம் மூலம் கேட்புகளை சமர்ப்பிக்கவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலகத்தை அணுகலாம்.
அரசு இணையதளம் www.tn.gov.in/bcmbcdept -ல் இத் திட்டம் குறித்தவிவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.