ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிசான் திட்ட முறைகேடு: உதவி வேளாண் அலுவலர் கைது

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிசான் சம்மன் திட்டத்தில் முறைகேடு தொடர்பான வழக்கில் உதவி வேளாண் அலுவலரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். வழக்கில் தொடர்புடைய நபர்களையும் கைது செய்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் இருந்து புதிதாகப் பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிசான் சம்மன் திட்டத்தில் 2,816 பேர் முறைகேடாக இணைக்கப்பட்டு சுமார் ரூ.1.12 கோடி அளவுக்குப் பணம் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, வேலூர் சிபிசிஐடி ஆய்வாளர் வஜ்ஜிரவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். இந்த வழக்கில் சோளிங்கர் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த தற்காலிகப் பணியாளர் சுப்பிரமணி (27) என்பவரை ஏற்கெனவே கைது செய்துள்ளனர்.

முறைகேட்டில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்து விசாரித்து வந்த நிலையில், கலவை வட்டார வேளாண் அலுவலகத்தில் உதவி வேளாண் அலுவலராகப் பணியாற்றி வந்த ராஜசேகரன் என்பவரை சிபிசிஐடி காவல் துறையினர் இன்று (செப். 24) கைது செய்தனர். மேலும், இரண்டு வேளாண் அதிகாரிகளிடமும் விசாரித்து வருகின்றனர்.

ரூ.65 லட்சம் மீட்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முறைகேடாகப் பயனாளிகள் பட்டியலில் இணைக்கப்பட்டு பணம் பெற்ற விவசாயிகளிடம் இருந்து பணம் மீட்கும் முயற்சியில் வேளாண் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதுவரை ரூ.65 லட்சம் அளவுக்கு பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளனர். இம்மாதம் இறுதிக்குள் பெரும்பான்மைத் தொகையைத் திரும்பப் பெறவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in