Last Updated : 24 Sep, 2020 02:40 PM

 

Published : 24 Sep 2020 02:40 PM
Last Updated : 24 Sep 2020 02:40 PM

வாகன விபத்தில் மகன் பலி: உடலைப் பார்த்த தந்தையும் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சோகம்

உத்திரகுமார் - விநாயகம்

புதுச்சேரி

புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தமிழகப் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்தார். மகனின் உடலைப் பார்த்த தந்தை திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

புதுச்சேரி திருபுவனையைச் சேர்ந்த உத்திரகுமார் (35), இன்று (செப். 24) அதிகாலை தமிழகப் பகுதியான பள்ளிநேளியனூர் பகுதியிலுள்ள ரயில்வே கேட் அருகே உள்ள சாலையின் ஓரமாக நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவ்வழியாக வந்த கார், உத்திரகுமார் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உத்திரகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து குறித்துத் தகவலறிந்து வந்த கண்டமங்கலம் காவல் துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அவருடன் நடைபயிற்சியில் சென்றவர்களிடம் காவல் துறையினர் விசாரித்தபோது, உத்திரகுமார் கணினி மையம் வைத்துள்ளதாகவும், அவரது தந்தை பண்டசோழநல்லூர் விஏஓவாக இருக்கும் விநாயகம் என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து, உத்திரகுமார் சடலத்தை புதுச்சேரியிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எடுத்துச் சென்றனர். அதைத்தொடர்ந்து, உத்திரகுமாரின் தந்தை விநாயகத்துக்குத் தகவல் தெரிவித்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். மகனின் உடலைப் பார்த்த விநாயகத்துக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவரும் உயிரிழந்தார்.

வாகன விபத்தில் மகன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தந்தையும் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x