Published : 24 Sep 2020 12:07 PM
Last Updated : 24 Sep 2020 12:07 PM

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல்: ஒரு வாரத்தில் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு கரோனா தொற்று ஏற்படலாம், வயதான பெற்றோரை பார்க்கவேண்டும் என்ற காரணங்களைக்காட்டி 90 நாட்கள் பரோல் கோரிய தாயார் அற்புதம்மாள் வழக்கில் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பரோல் மனுவை நிராகரித்துவிட்டதாக தமிழக அரசும், சிறைத்துறையும் தெரிவித்தன. இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி அமர்வில் கடந்த 8-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, அற்புதம்மாள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், “பேரறிவாளனின் தாய் தந்தை இருவரும் வயதானோர் என்பதாலும், அவர்களை கவனித்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.

தமிழக அரசு 7 பேரையும் விடுவிக்க பரிந்துரைத்த நிலையில், ராஜீவ்காந்தி கொலையில் சர்வதேச தொடர்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பன்னோக்கு விசாரணை முகமையை காரணம் காட்டி அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிறை விதிகளில் விலக்களித்து பேரறிவாளனுக்கு பரோல் வழங்க உத்தரவிட வேண்டும். விடுதலை செய்ய முடிவெடுத்த அரசு, பரோல் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கிறது. விடுதலை செய்ய முடிவெடுத்ததும், விடுப்பு மறுப்பதும் ஒரே கட்சியின் தலைமையிலான அரசுதான்” என வழக்கறிஞர் சண்முகசுந்தரம் சுட்டிக்காட்டினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “பரோல் விண்ணப்பங்கள் மீது இரண்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என சட்டத் திருத்தம் கொண்டு வரும்படி ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது” என அரசுத்தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.

மேலும், பரோல் கோரிய விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்க ஆலோசனைகள் வழங்க சிறைத்துறையில் சட்ட ஆலோசகரை ஏன் நியமிக்க கூடாது எனவும் நீதிபதிகள், அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து அரசிடம் விளக்கம் கேட்க வேண்டியுள்ளதாகவும், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞரிடம் தெரிவிப்பதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பேரறிவாளன் பரோல் வழக்கை பொறுத்தவரை, அவரது உடல்நிலை முழுமையாக, புழல் மருத்துவமனையிலேயே தினசரி கவனிக்கபடுகிறது.

அவரது உடல் நிலையில் எவ்வித குறைபாடும் இல்லாமல், சீரான நிலையில் இருப்பதாக பதில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார். அனைத்து சிறைவாசிகளுக்கும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளும் முழுமையாக பின்பற்றப்பட்டு உள்ளதாகவும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

மேலும், விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றினாலும், சிறையில் இருக்கும் வரை சிறை விதிகளை கடைபிடிக்க வேண்டும், கரோனா தொற்று காலத்தில் சிறையில் இருப்பதே பாதுகாப்பானது என அரசு வழக்கறிஞர் பிரதாப்குமார் வாதிட்டார்.

கடந்த முறை பேரறிவாளனுக்கு வழங்கிய பரோல், கடந்த ஜனவரி மாதம் தான் முடிந்ததால், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகுதான் மறுபடியும் பரோல் கேட்க முடியும். அமைச்சரவை மாறியிருந்தாலும், முடிவெடுத்த அரசுகள் ஒன்றுதான் என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இன்று வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். உத்தரவு கிடைத்த ஒரு வாரத்திற்குள் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, 30 நாட்கள் விடுப்பு அளிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

அவர் விடுப்பில் இருக்கும் காலங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளுக்காக சிறைத்துறை விதிக்கும் நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x