Published : 24 Sep 2020 07:46 AM
Last Updated : 24 Sep 2020 07:46 AM

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ஹெலிகாப்டரில் வந்து ஆண்டாள் கோயிலில் 3 மணி நேரம் சிறப்பு யாகம் நடத்திய அதிமுக நிர்வாகி

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடத்திய அதிமுக இளைஞர் பாசறை மாநில துணைப் பொதுச் செயலாளர் விஷ்ணுபிரபு.

வில்லிபுத்தூர்

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டி ஹெலிகாப்டரில் வந்து அதிமுக நிர்வாகி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று 3 மணி நேரம் சிறப்பு யாகம் நடத்தினார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அண்மையில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் சுவாமி தரிசனம் செய்தார். துணை முதல்வர் பன்னீர்செல்வம் கடந்த 12-ம் தேதி ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

இந்நிலையில், கோவையைச் சேர்ந்த அதிமுக இளைஞர் பாசறை மாநில துணைப் பொதுச் செயலாளர் விஷ்ணுபிரபு, தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி தொடர வேண்டி ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதியில் சுமார் 3 மணி நேரம் குடும்பத்தினருடன் சிறப்பு யாகம் நடத்தினார்.

அப்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தையும் யாகசாலை அருகில் வைத்து பூஜை செய்யப்பட்டது. இந்த யாகத்துக்காக கோவையிலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் விஷ்ணுபிரபு குடும்பத்தினருடன் வந்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டு பின்னர் கார் மூலம் கோயிலுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

யாகசாலை பூஜை முடிந்த பின் விஷ்ணுபிரபு அளித்த பேட்டியில், "2021-ம் ஆண்டுக்கு மிகப்பெரிய சிறப்பு உள்ளது. அதிமுக தொடங்கப்பட்டு 49-வது ஆண்டு நிறைவு பெற்று 50-வது பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அப்போது மீண்டும் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்று இந்த யாகத்தை நடத்தியுள்ளோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x