Published : 24 Sep 2020 07:43 AM
Last Updated : 24 Sep 2020 07:43 AM

திருவாரூர் அருகே கீழ எருக்காட்டூரில் கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு: ஒரு ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சேதம்

திருவாரூர் அருகே கீழ எருக்காட்டூர் கிராமத்தில் ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டதில் நடவு செய்து 30 நாட்களே ஆன ஒரு ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்தன.

கீழ எருக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன் என்ற விவசாயியின் நிலத்தின் அடியில் பதிக்கப்பட்டுள்ள ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய்க் குழாயில் நேற்று முன்தினம் இரவு உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் வயல் முழுவதும் பரவியது. இதில் நடவு செய்து, 30 நாட்களே ஆன சம்பா நெற்பயிர்கள் கச்சா எண்ணெயில் மூழ்கி சேதமடைந்தன.

இதுகுறித்து விவசாயி தனசேகரன் கொடுத்த தகவலின்பேரில் ஓஎன்ஜிசி அதிகாரிகள் நேற்று காலை நேரில் வந்து கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்ட வயலை பார்வையிட்டனர். வருவாய்த் துறை சார்பில் கூத்தாநல்லூர் வட்டாட்சியர் மகேஷ் வந்து கச்சா எண்ணெய் பரவியதால் சேதமடைந்த நெற்பயிர்களை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து, கச்சா எண்ணெயை அகற்றும் பணியில் ஓஎன்ஜிசி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதேபோல, கடந்த 2018-ம் ஆண்டு இதே வயலில் ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் வயலின் மேல் பரப்பில் உள்ள மண்ணை முழுவதுமாக மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கான நிவாரணத் தொகையாக ரூ.75 ஆயிரத்தை ஓஎன்ஜிசி நிறுவனம் விவசாயி தனசேகரனுக்கு அளித்தது.

இந்நிலையில், தற்போது நடவு செய்யப்பட்டு 30 நாட்களே ஆன நிலையில் சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்துள்ள நிலையில் கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டுமென தனசேகரன் கோரிக்கை விடுத்தார்.

வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கைக்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்படும் என ஓஎன்ஜிசி அதிகாரிகள் உத்திரவாதம் அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x