Published : 24 Sep 2020 07:41 AM
Last Updated : 24 Sep 2020 07:41 AM

ஆன்லைனில் சூதாடிய கணவர்: மகளுக்கு விஷம் தந்து மனைவி தற்கொலை

விழுப்புரம் சித்தேரிகரை பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன்(45). இவரது மனைவி கவிதா(35). இவர்களது மகள்கள் பவித்ரா (17), ஷர்மி (12). கஜேந்திரன் நகைக் கடை பட்டறையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

பொதுமுடக்கத்தால் அவருக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. வருமானம் இன்றி அவர் கடன் வாங்கியுள்ளார். கடன் நெருக்கடியால், ஆன்லைன் லாட்டரி வாங்கியுள்ளார். அதில், பணத்தை இழக்க மதுபழக்கத்துக்கும் அடிமையாகி நாள்தோறும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனிடையே கஜேந்திரன் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இதனால் வெறுத்துப் போன கவிதா, நேற்று முன்தினம் பிற்பகல், கோயிலுக்கு செல்வதாக கூறிவிட்டு தனது 2 மகள்களுடன் வெளியே சென்றார். இரவு நெருங்கியும் அவர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் சித்தேரிகரை ரயில்வே கேட் அருகில் நேற்று கவிதாவும் அவரது 2 மகள்களும் சுயநினைவின்றி கிடந்தனர். தகவலறிந்த போலீஸார் வந்து பார்த்தபோது, கவிதா, அவரது மகள் பவித்ரா ஆகியோர் உயிரிழந்து கிடந்தனர். ஷர்மி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். அச்சிறுமியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம், இதே ஆன்லைன் லாட்டரி விவகாரத்தில் சிக்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x