Published : 24 Sep 2020 07:16 AM
Last Updated : 24 Sep 2020 07:16 AM

ஏழை மக்களுக்கு காப்பீடு; ஆக்கிரமிப்பு அகற்ற புது சட்டம்

சட்டப்பேரவையில், 2019-20ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கடந்த 2019 பிப்ரவரி 8-ம் தேதி தாக்கல் செய்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘‘வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு விரைவில் விரிவான விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். இந்த புதிய திட்டம் மூலம் காப்பீட்டுத் தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும். புதிய விரிவான காப்பீடு திட்டத்துக்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்’’ என்று அறிவித்தார்.

இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது. இதில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் க.சண்முகம், நிதித் துறை செயலர் ச.கிருஷ்ணன், வருவாய்த் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆண்டு வருமான நிர்ணயம், எத்தனை குடும்பங்களை இதில்இணைப்பது, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர் எண்ணிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஆக்கிரமிப்பு அகற்றம்

தமிழகத்தில் நீர்நிலை, அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிர மிப்புகளால் ஆண்டுதோறும் அரசுக்கு பெரும் இழப்பு, செலவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை தடுப்பது, அகற்றுவதற்கான புதிய சட்டத்தை கொண்டுவர தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாகவும் நேற்று ஆலோசிக்கப்பட்டது. அப்போது, நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்த விவரங்கள், வருவாய்த் துறையால் தெரிவிக்கப்பட்டது. சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டியஅம்சங்கள், ஆக்கிரமிப்புகளை தடையின்றி அகற்றுதல், ஆக்கிரமிப்பவர்களுக்கான தண்டனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x