

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
நாகர்கோவிலைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்தத் தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
அதில், பாலியல் சம்பவம் 2017-ல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்போது எந்தப்புகாரும் அளிக்கவில்லை. உள்நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் ஏற்கெனவே ஜாமீன் மனு தாக்கல் செய்து தள்ளுபடியாகியுள்ளது. தற்போது மீண்டும் மனுத் தாக்கல் செய்துள்ளார். வழக்கில் விசாரணை முடியவில்லை. ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. ஜாமீன் வழங்கக்கூடாது என்றார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் வாழ்க்கையை அவரது தாயாருடன் சேர்ந்து உயர் பொறுப்பு வகித்த ஒருவர் சீரழித்ததை ஏற்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார். பின்னர் விசாரணையை அக். 6-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.