ஆன்-லைன் சூதாட்டம் காரணம்? - தருமபுரியைச் சேர்ந்த போலீஸ்காரர் தற்கொலை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

தருமபுரியைச் சேர்ந்த சிறப்பு காவல் படை (பட்டாலியன்) போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார். ஆன்-லைன் சூதாட்டத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

தருமபுரியைச் சேர்ந்தவர் வெங்கடேஷன் (28). இவர் சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் 7 பேர் கொண்ட குழுவுடன் வெங்கடேசன் தலைவாசலில் சிறப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இவர்கள் அங்குள்ள அரசு பெண்கள் பள்ளியில் தங்கி பணிபுரிந்து வந்தனர்.

வெங்கடேசன் நேற்று முன்தினம் இரவு அவரது உறவினர் வெற்றி என்பவரை அலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ பிடிக்கவில்லை என விரக்தியுடன் பேசியுள்ளார். இதுதொடர்பாக வெற்றி, வெங்கடேசனின் தம்பி ஹரிராஜனை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். அவர் வெங்கடேசனை தொடர்பு கொண்டு பேசியதோடு தான் தலைவாசலுக்கு புறப்பட்டு வருவதாக கூறி, இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்தார்.

வெங்கடஷேன் தங்கியுள்ள பெண்கள் பள்ளிக்கு சென்று ஹரிராஜன் பார்த்தபோது, வெங்கடேசன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அவரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக தலை வாசல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வெங்கடேசன் ஆன்-லைன் சூதாட்டத்தில் பணம் இழந்துள்ளார்.

இதற்காக அவர் சக பணியாளர்களிடம் பணம் கடன் வாங்கியுள்ளார். மேலும், இவரது தந்தை கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் இறந்துள்ளார். இந்த சோகத்தில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in