Published : 23 Sep 2020 09:51 AM
Last Updated : 23 Sep 2020 09:51 AM

திருப்பூரில் பெண் கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம்: போலீஸார் தாக்கியதாக உறவினர்கள் புகார்

திருப்பூர்

திருப்பூரில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட இளைஞர், விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் திடீரென உயிரிழந்தசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினர் தாக்கியதால் அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சரண்யா (24). இவர், சில நபர்கள் தன்னை கொலை செய்யும் நோக்கில் உடல் மீது சூடானநீரை ஊற்றியதாகக் கூறி, படுகாயங்களுடன் கடந்த 29-ம் தேதி திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்ந்தார். திருப்பூர் தெற்கு போலீஸார் நடத்திய விசாரணையில், செட்டிபாளையம் பகுதியில் தங்கியிருந்த வீட்டில் இந்த சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில், ஊரக காவல் நிலைய போலீஸார் அரசு மருத்துவமனைக்கு சென்று சரண்யாவிடம் வாக்குமூலம் பெற்றனர்.

அப்போது, "திருப்பூர் - தாராபுரம் சாலை செட்டிபாளையம் ஜெய் நகரைச் சேர்ந்த சி.மணிகண்டன் (எ) ராஜூ (34) என்பவரின்வீட்டில் தங்கி வீட்டு வேலை செய்துவந்ததாகவும், கடந்த மாதம் 24-ம்தேதி மணிகண்டன் மற்றும் அங்கிருந்த ஜோதி, கலா ஆகியோர்சேர்ந்து என் மீது சூடான நீரை ஊற்றி கொலை செய்ய முயன்றதாகவும் தெரிவித்துள்ளார். புகாரின்பேரில், பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, மணிகண்டன் உள்ளிட்டோரை போலீஸார் தேடி வந்தனர். இதற்கிடையே, சிகிச்சையில் இருந்த சரண்யா, கடந்த 16-ம் தேதி உயிரிழந்தார். இதனால், கொலை வழக்காக மாற்றப்பட்டது. தீவிர தேடுதலுக்கு பிறகு, நேற்று காலை மணிகண்டன் பிடிபட்டார். மேலும், தலைமறைவாக உள்ள இரு பெண்கள் குறித்து விசாரிக்க, அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.

விசாரணையின்போது, மணிகண்டனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இறுதியாக, திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்குபரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அங்கேயே அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தகவலறிந்த உறவினர்கள், அரசு மருத்துவ மனையில் குவிந்தனர். மணிகண்டன் உயிரிழப்பில் சந்தேகம்இருப்பதாகவும், போலீஸார் தாக்கியதால் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் கூறினர். மேலும், அரசு மருத்துவமனைக்கு வந்த ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன், கோட்டாட்சியர் கவிதா ஆகியோரையும் முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கைப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமாரிடம் கேட்டபோது, "திடீரென வலிப்பு ஏற்பட்டதால், காவல் துறையினர்தான் அவரை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மாறாக, காவல் துறையினர் யாரும் அவரை அடிக்கவில்லை. இருப்பினும், உறவினர்களின் புகாரின்பேரில் விசாரணை நடைபெறுகிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x