Last Updated : 23 Sep, 2020 09:53 AM

 

Published : 23 Sep 2020 09:53 AM
Last Updated : 23 Sep 2020 09:53 AM

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 95.27 அடியாக உயர்ந்துள்ளது.

காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அங்குள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகள் ஏற்கெனவே நிரம்பிவிட்ட நிலையில், அவற்றிலிருந்து உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இந்த உபரி நீர் கடந்த இரு தினங்களாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று (செப். 22) காலை விநாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று (செப். 23) காலை விநாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று காலையில் 91.45 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், ஒரே நாளில் 3.82 அடி அதிகரித்து, இன்று காலை 95.27அடியாக உயர்ந்துள்ளது.

நேற்று அணையின் நீர் இருப்பு 54.32 டிஎம்சி ஆக இருந்த நிலையில், இன்று நீர் இருப்பு 58.5 8 டிஎம்சி ஆக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு விநாடிக்கு 18 ஆயிரம் கன அடியாகவும், கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 500 கன அடியாகவும் நீர் திறப்பது தொடர்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x