Published : 23 Sep 2020 07:09 AM
Last Updated : 23 Sep 2020 07:09 AM

இன்று பேச்சுவார்த்தை நடைபெறுவதால் மாநகராட்சி தொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டம் தள்ளிவைப்பு

மாநகராட்சி தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், இன்று பேச்சுவார்த்தை நடத்துவதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததால் உண்ணாவிரத போராட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 7-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி செங்கொடி சங்க நிர்வாகிகள் பி.சீனிவாசலு, ஜி.முனுசாமி, கே.தேவராஜ் உள்ளிட்ட 291 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதைக் கண்டித்து செங்கொடி சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்றுஉண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காவல் துறைஅதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நேற்று போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதுதொடர்பாக சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறும்போது, “போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை மாநகராட்சி நிர்வாகம் பழிவாங்குகிறது.

இதை கைவிட்டு அனைவருக்கும் வேலையும், அரசாணைப்படி ஊதியமும் வழங்க வேண்டும், பணி நிரந்தரத்தை உறுதி செய்ய வேண்டும்” என்றார்.

அங்கிருந்த தொழிலாளர்களிடம் பேசிய செங்கோடி சங்கத்தின் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், “பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தையை புதன்கிழமை (இன்று) ரிப்பன் மாளிகையில் நடத்துவதாகவும், போராட்டத்தை ஒத்தி வைக்கும்படியும் காவல் துறையினர் மூலம்மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. அதனடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x