Published : 23 Sep 2020 07:07 AM
Last Updated : 23 Sep 2020 07:07 AM

மின்னணு முறையில் மின்கட்டணம் செலுத்தும்போது நுகர்வோருக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சேவை மையம் தொடங்க திட்டம்

மின்னணு முறையில் மின்கட்டணம் செலுத்தும்போது நுகர்வோருக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், சேவை மையம் தொடங்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

மத்திய மின்துறை அமைச்சகம் அனைத்து மாநில மின்வாரியங்களையும், தங்களது மின் கட்டண பணப் பரிவர்த்தனைகளை மின்னணு முறையில் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியது.

இதையடுத்து, மின்வாரியம் நுகர்வோர்கள் தங்களது கட்டணத்தை மின்னணு முறையில் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியது.

எனினும், ஏராளமான மின்நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை மின்வாரிய அலுவலகங்களில் உள்ள கவுன்ட்டர்களில் ரொக்கப் பணமாக கட்டவே விரும்புகின்றனர். மின்னணு முறையில் பணம் செலுத்தும் போது ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளே இதற்குக் காரணம்.

மேலும், மின்வாரிய இணையதளம், மொபைல் ஆப் மூலம் மின்கட்டணம் செலுத்தும்போது, சில நேரங்களில் நுகர்வோர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது. ஆனால், மின்வாரிய கணக்கில் அந்தப் பணம் போய் சேருவதில்லை.

அதேபோல், சில நேரங்களில் சர்வர் பிரச்சினை காரணமாக, மின்னணு முறையில் பணம் செலுத்தும்போது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு விடுகிறது.

ஆனால், இரண்டு, மூன்று நாட்கள் கழித்துதான் வங்கிக் கணக்கில் அந்தப் பணம் சென்று சேர்கிறது. இந்நிலையில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விதமாக, மின்னணு முறையில் மின்கட்டணத்துக்கென என தனி சேவை மையம் அமைக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், மின்னணு முறையில் மின்கட்டணம் செலுத்தும் போது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் இந்த சேவை மையம் மூலம் தீர்க்கப்படும் என மின்வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x