தமிழக எல்லையில் கிருஷ்ணா நீர் வரத்து 732 கன அடியாக அதிகரிப்பு

தமிழக எல்லையில் கிருஷ்ணா நீர் வரத்து 732 கன அடியாக அதிகரிப்பு
Updated on
1 min read

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து, சென்னைக் குடிநீருக்காக திறக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நீரின் வரத்து தமிழக எல்லையில் விநாடிக்கு 732 கன அடியாக அதிகரித்துள்ளது.

தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, நடப்பாண்டுக்கான முதல் தவணைக்கான கிருஷ்ணா நீரை, கண்டலேறு அணையிலிருந்து, கடந்த 18-ம்தேதி முதல் ஆந்திர அரசு திறந்து வருகிறது. தொடக்கத்தில் விநாடிக்கு 1,500 கன அடி அளவில் திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர், படிப்படியாக அதிகரிக்கப்பட்டு கடந்த 20-ம் தேதி முதல் விநாடிக்கு 2000 கன அடி அளவில் திறக்கப்பட்டு வந்தது.

இது நேற்று காலைமுதல் 500 கன அடி குறைக்கப்பட்டு, விநாடிக்கு 1,500 கன அடி அளவில் திறக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணா நீர், தமிழக எல்லையான தாமரைக்குப்பம் ஜீரோ பாயின்டுக்கு கடந்த 20-ம்தேதி இரவு வந்தடைந்தது.

இது நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 233 கன அடியாக ஜீரோ பாயின்டுக்கு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 732 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அங்கிருந்து நேற்று முன்தினம் காலை முதல் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.

இதனால், கடந்த 20-ம் தேதி பூண்டி ஏரியில் 87 மில்லியன் கன அடியாக இருந்த நீர் இருப்பு, நேற்று காலை நிலவரப்படி 156 மில்லியன் கன அடியாக அதிகரித்துள்ளது.

தாமரைக்குப்பம் முதல் பூண்டி வரை உள்ள கிருஷ்ணாகால்வாயில் தண்ணீர் அதிகளவில் சென்று கொண்டிருப்பதால், யாரும் கிருஷ்ணா கால்வாய்க்கு குளிக்க, பார்வையிட, செல்பி எடுக்க செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in