

கோவையில் காட்டு யானை தாக்கியதில் பலியான வனக்காப்பாளர் குடும்பத்துக்கு உடனடியாக ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்குமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு வட்டம், சொக்கனூர் கிராமம், கரடிமடை பிரிவு, ஆத்துப்பள்ளம் பகுதியில் 7.9.2015 அன்று பொதுமக்களுக்கு தொந்தரவு செய்து வந்த காட்டு யானையினை, நவக்கரை மற்றும் கரடிமடை பிரிவு வனவர்கள் கொண்ட குழு, வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கூச்சமலை கிழக்கு சுற்று வனக்காப்பாளர் பி.முத்துசாமி காட்டு யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
காட்டு யானை தாக்கியதில் அகால மரணமடைந்த வனக்காப்பாளர் முத்துசாமி குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த வனக்காப்பாளர் முத்துசாமி அவர்களின் குடும்பத்திற்கு வனத் துறை மூலம் மூன்று லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.