பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்: மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்: மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
Updated on
1 min read

கரோனா காலத்தில் உயிரைப் பணயம் வைத்து உழைத்த மக்கள் நலப்பணியாளர்கள் அரசு ஒப்புக்கொண்ட ஊதியத்தைக் கேட்டுப் போராடியதற்குப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது அநீதி. அவர்களுக்கு உடனடியாகப் பணி வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு நாங்கள் துணை நிற்போம் என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் தொழிற்சங்க அணித் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி இன்று விடுத்துள்ள அறிக்கை:

“சென்னை மாநகராட்சியில் சுமார் 6,400 நிரந்தரத் தொழிலாளர்களும், சுமார் 4,500 ஒப்பந்தத் தொழிலாளர்களும் தூய்மைப் பணியாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். நிரந்தரத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு சுமார் 379 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு சுமார் 210 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்தக் கரோனா பேரிடர் காலத்தில் முன்களப் பணியாளர்களாகப் போற்றப்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்காமல் தமிழக அரசு புறக்கணிப்பதைக் கண்டித்தும், ஊதியத்தை உயர்த்தி வழங்கிடக் கோரியும் கடந்த செப். 7 ஆம் தேதி அன்று ரிப்பன் மாளிகை முன் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் தொழிலாளர்களுக்குச் சொற்ப அளவில் (12 ரூபாய்) மட்டும் ஊதியம் உயர்த்தி வழங்குவதாக அறிவித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு போராட்டத்தைக் கைவிட்டனர்.

இந்நிலையில் ஊதிய உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தற்காலிகப் பணியாளர்கள் சுமார் 291 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, 714 தொழிலாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெருந்தொற்றுநோய் காலத்தில் மக்கள் பணியில் சிறப்பான முறையில் செயல்பட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்ட காரணத்திற்காக, தொழிலாளர்களின் குரல்வளையை நெரிக்கின்ற வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டதையும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ததையும் மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் அணி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

உரிமைகளுக்காகப் போராடியதற்காகப் பதவி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும். தொழிலாளர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் எந்த நிபந்தனையுமின்றி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசையும், சென்னை மாநகராட்சியையும் வலியுறுத்துவதோடு, தொழிலாளர்களின் உரிமைகளை மீட்க தொழிலாளர்களின் தோளோடு தோள் நின்று குரல் கொடுக்கத் தயாராக இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்”.

இவ்வாறு எஸ்.ஏ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in