Published : 22 Sep 2020 10:04 AM
Last Updated : 22 Sep 2020 10:04 AM

ஆனைமலையில் பழங்குடியின கிராமங்களுக்கு சூரியஒளி மின் வசதி

பொள்ளாச்சி

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பல ஆண்டுகளாக மின்சார வசதிக்குப் போராடிய மலைவாழ் கிராமங்களில் தற்போது மின்வாரியம் மூலம் சூரியஒளி மின் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளதால் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச் சரகத்தில் 17 வனக் கிராமங்களில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 2,700-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இக்கிராமங்களில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், வன விலங்குகள் மத்தியில் வாழும் பழங்குடியின மக்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பின்றி வாழ்ந்து வந்தனர். மேலும், மின் வசதி இல்லாததால் ஆன்லைன் கல்வி பயில்வதிலும் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து, வனக் கிராமங்களுக்கு மின்வசதி ஏற்படுத்தித் தர வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், மின்வாரியம் சார்பில் பொள்ளாச்சி வனச் சரகத்தில் சர்க்கார்பதி, சின்னார்பதி, நாகரூத்து -1, நாகரூத்து -2 ஆகிய வனக் கிராமங்களில் 106 குடும்பங்கள், உலாந்தி வனச்சரகத்தில் கோழிகமுத்தி, எருமைப்பாறை, கூமாட்டி வனக் கிராமங்களில் 116 குடும்பங்கள், வால்பாறை வனச் சரகத்தில் வெள்ளிமுடி, கவர்கல், நெடுங்குன்றா, கீழ்பூனாட்சி ஆகிய வனக் கிராமங்களில் 118 குடும்பங்கள், மானாம்பள்ளி வனச் சரகத்தில் சின்கோனா, சங்கரன்குடி, உடும்பன்பாறை, பாலகினார், கல்லார்குடி, பரமன்கடவு வனக் கிராமங்களில் 139 குடும்பங்கள் என மொத்தம் 479 குடும்பங்களுக்கு சூரிய ஒளி மின்வசதி கருவிகள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து வனத் துறையினர் கூறும்போது, "வனத்துக்குள் வாழும் பழங்குடியின மக்களுக்கு மின்வசதி கிடைக்க, சூரியஒளி மின் சாதனங்கள் வழங்குமாறு மின் வாரியத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, மின்வாரியம் சார்பில் 479 குடும்பங்களுக்கு சூரியஒளி மின் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் வனச் சூழல் மற்றும் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இருக்கும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x