Published : 22 Sep 2020 07:37 AM
Last Updated : 22 Sep 2020 07:37 AM

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 8 மாதங்களில் 1.66 லட்சம் பேர் விண்ணப்பம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, கடந்த 8 மாதங்களில் 1.66 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த 2019 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடந்தன. அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 14-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது:

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, ஆன்லைன் மற்றும் நேரடியாக செப்டம்பர் 20-ம் தேதி வரை 5 லட்சத்து 51 ஆயிரத்து 408 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் புதிதாக பெயர் சேர்க்க 1 லட்சத்து 66 ஆயிரத்து 408 பேர் படிவம்-6 மூலமாகவும், பெயர் நீக்க 2 லட்சத்து 37 ஆயிரத்து 248 பேர் படிவம்-7 மூலமாகவும் விண்ணப்பித்துள்ளனர்.

தேர்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் இணையம் மூலமாக வாக்காளர் பட்டியலை சரிபார்த்தது. அப்போது அதில் 56 ஆயிரம் இரட்டை பதிவுகள் இருப்பதை கண்டுபிடித்து, தமிழகத்துக்கு அனுப்பி மீண்டும் சரிபார்க்கும்படி கூறியுள்ளது. மாதம்தோறும் இதுபோன்ற தகவல்களை தமிழகத்துக்கு அனுப்பி வருகிறது. இரட்டை பதிவுகளை கணினி மூலம் சரிபார்க்கும் பணி மாவட்ட வாரியாக நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இடைத்தேர்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள குடியாத்தம், திருவொற்றியூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதை தள்ளிவைக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளநிலையில், அந்த தொகுதிகளுக்குஎப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘ மத்திய அரசுடன் ஆலோசித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்’’ என்று சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x