Published : 22 Sep 2020 07:20 AM
Last Updated : 22 Sep 2020 07:20 AM

கரோனா தொற்று பரவலைத் தடுக்க தினமும் 15,000 பேரின் தொடர்பு தடம் அறியும் பணியில் மாநகராட்சி

சென்னையில் கரோனா தொற்றைத் தடுக்க தினமும் 15 ஆயிரம் பேரின் தொடர்புகள் குறித்து தடம் அறியும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. இந்த நடவடிக்கை, சென்னையில் கரோனா தொற்று குறைந்து வருவதில் முக்கிய பங்கு வகிப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் இதுவரை 1 லட்சத்து 54 ஆயிரத்து 624 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இதுவரை 1 லட்சத்து 41 ஆயிரத்து 612 பேர் சிகிச்சை பெற்றுகுணமடைந்துள்ளனர். 9 ஆயிரத்து 966 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 ஆயிரத்து46 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தினமும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடமிருந்து, கரோனா தொற்று உள்ளதா என கண்டறிவதற்கான மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. இவற்றில் தினமும் சராசரியாக 900-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

அதன் பின்னர் இவர்களின் தொடர்புகள் குறித்து தடம் அறியும் பணி மிக முக்கியத்துவம் பெறுகிறது. தினமும் 15 ஆயிரம் பேரின் தொடர்பு தடம் அறியும் பணியை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

கரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு அறிகுறிகள் தென்பட்ட நாளில் இருந்து முந்தைய 3 நாட்கள் மற்றும் அடுத்த 10 நாட்களில், அந்த நபருடன் நெருக்கமாக இருந்தவர்களைத்தான் தொடர்பில் இருந்தவர்களாக கருதுகிறோம். அவர்களைத் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட நாட்களில் எங்கு இருந்தார்கள், யாரை எல்லாம் சந்தித்தனர், யாருடன் நெருக்கமாக இருந்தனர் என்பதை கேட்டறிகிறோம். அந்த விவரங்கள் சுகாதார ஆய்வாளர்களிடம் வழங்கப்பட்டு நேரில் கள ஆய்வு செய்து உறுதி செய்யப்படுகிறது.

தொலைபேசியில் தொடர்பு

அதன் பின்னர் தனிமைப்படுத்து தல் கண்காணிப்பு பிரிவுக்கு இந்த விவரங்கள் வழங்கப்படுகின்றன. அதைக் கொண்டு, தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, அவர்களுக்கு கரோனா அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள னரா, அவர்களுக்கு ஏதேனும் சிரமங்கள் உள்ளனவா என கேட்டறிகின்றனர்.

இப்பணியை தொடர்பு தடம் அறிதல் என்கிறோம். இவ்வாறு தினமும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இதில் காய்ச்சல், இருமல், நாவில் சுவைஇழத்தல் போன்ற அறிகுறி இருப்பவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி, கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இத்தகைய நடவடிக்கைகள், சென்னையில் கரோனா தொற்று குறைந்து வருவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளால் சென்னையில் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினமும் 1000-க்கும் கீழ் பதிவாகி வருகிறது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x