Published : 08 Sep 2015 09:21 PM
Last Updated : 08 Sep 2015 09:21 PM
சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட 5 பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு இந்த மாதம் இறுதியில் தொடங்குகிறது.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவ கல்லூரி, யுனானி மருத்துவ கல்லூரி, யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவ கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவ கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி என 6 அரசு கல்லூரிகள் உள்ளன.
இதேபோல 5 தனியார் சித்த மருத்துவ கல்லூரிகள், 3 தனியார் ஆயுர்வேத கல்லூரிகள், 8 தனியார் ஓமியோபதி கல்லூரிகள், 4 தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிகள் என மொத்தம் 21 தனியார் கல்லூரிகள் இருக்கின்றன. 6 அரசு கல்லூரிகளில் 336 இடங்கள் மற்றும் 21 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,000 இடங்கள் உள்ளன.
இந்நிலையில் 2015 - 2016-ம் கல்வி ஆண்டுக்கு சித்தா, ஆயுர்வேத, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஓமியோபதி (பி.எஸ்.எம்.எஸ், பி.ஏ.எம்.எஸ், பி.யு.எம்.எஸ், பி.என்.ஒய்.எஸ், பி.எச்.எம்.எஸ்) பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விற்பனை கடந்த ஜூன் 29-ம் தேதி முதல் ஜூலை 24-ம் தேதி வரை நடந்தது. தமிழகம் முழுவதும் இருந்து 5,075 பேர் விண்ணப்பித்தனர். இந்நிலையில் 5 பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வை இந்த மாதம் இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் கூறுகையில், “சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஓமியோபதி படிப்புகளுக்கு 5,075 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்னும் 2 வாரங்களில் வெளியிடப்படும். இந்த மாதம் இறுதியில் கலந்தாய்வு தொடங்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT