

சென்னையில் பேரணி நடத்திய சத்துணவு ஊழியர்கள் மீது தடியடி நடத்தப்படவில்லை என அமைச்சர் பி.வளர்மதி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று துரைமுருகன் (திமுக), அ.சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட்) ஆகியோர், சென்னையில் சத்துணவு ஊழியர்கள் நடத்திய பேரணி குறித்து பேசினர். அதற்கு பதிலளித்து சமூக நலத்துறை அமைச்சர் பி.வளர்மதி கூறியதாவது:
சத்துணவு ஊழியர்கள் போராட்டம் எதுவும் நடத்தவில்லை. முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க வேண்டும் என்பதற்காக பேரணி நடத்தினர். அவர்களை இரவு 10.45 மணிக்கு எனது இல்லத்தில் சந்தித்துப் பேசினேன். முதல்வரை சந்திக்க வேண்டும் என்று மட்டுமே கோரிக்கை விடுத்தனர்.
அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தவில்லை. கடந்த திமுக ஆட்சியில் சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவேன் என அன்றைய முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
இவ்வாறு அமைச்சர் கூறியதும், திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டனர். இதனால், பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.