மதுரையில் எலும்பு வங்கி தொடங்குவது எப்போது?- மருத்துவக்கல்வி இயக்குனர் ஆஜராக உத்தரவு

மதுரையில் எலும்பு வங்கி தொடங்குவது எப்போது?- மருத்துவக்கல்வி இயக்குனர் ஆஜராக உத்தரவு
Updated on
1 min read

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு வங்கி தொடங்கக் கோரிய வழக்கில் மருத்துவக் கல்வி இயக்குனர் காணொலி வழியாக நீதிமன்றத்தில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த வெற்றிச்செல்வம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் எலும்பு வங்கி தொடங்க 2017-ல் சென்னை மருத்துவக் கல்வி இயக்குனரகம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், 3 ஆண்டுகளாக எலும்பு வங்கி தொடங்கப்படவில்லை.

மனித உறுப்பு மாற்றுச் சட்டத்தில் சிறுநீரகம், எலும்பு மற்றும் பிற உறுப்புகள் தானம் செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது.

வாகன விபத்துகளில் பலருக்கு எலும்பு முறிவு ஏற்படுகிறது. இவர்களுக்கு எலும்பு வங்கியால் மிகுந்த பலன் கிடைக்கும். மனித எலும்பு வங்கியால் புற்றுநோய் மற்றும் எலும்பு முறிவால் பாதிக்கப்படும் எலும்புக்குப் பதில், தானமாகப் பெறப்படும் எலும்பை மாற்ற முடியும்.

எனவே, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு வங்கி தொடங்கவும், அதற்குத் தேவையான உபகரணங்கள், பணியாளர்களை நியமிக்கவும், எலும்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு விசாரித்தது. இதற்கு தமிழக சுகாதாரத்துறைச் செயலர் பதிலளிக்கவும், மருத்துவக் கல்வி இயக்குனர் காணொலி வழியாக நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு, விசாரணையை ஒத்திவைத்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in