காவலர்களின் உடல்நலனைப் பாதுகாக்க ஆற்காடு நகர காவல் நிலையத்தில் நவீன உடற்பயிற்சிக் கூடம்; வேலூர் சரக டிஐஜி தொடங்கி வைத்தார்

ஆற்காடு நகர காவல் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி மேற்கொள்ளும் எஸ்.பி. மயில்வாகனன்.
ஆற்காடு நகர காவல் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ள நவீன உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி மேற்கொள்ளும் எஸ்.பி. மயில்வாகனன்.
Updated on
2 min read

ஆற்காடு நகர காவல் நிலையத்தில் காவலர்களின் உடல் நலனைப் பாதுகாக்கும் வகையில் நவீன உடற்பயிற்சிக் கூடத்தை வேலூர் சரக டிஐஜி காமினி தொடங்கி வைத்தார்.

தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலைக் காவலர்கள், உதவி ஆய்வாளர்களாகப் பணியில் சேருபவர்கள் உடல் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு காவல் நிலையங்களில் பணியில் அமர்த்தப்படுகின்றனர். பயிற்சிக் காலத்துக்குப் பிறகு காவல் பணிக்குச் செல்லும்போது, போதிய உடற்பயிற்சிகள் இல்லாதது, தூக்கமின்மை, குறித்த நேரத்தில் சாப்பிட முடியாதது போன்ற காரணங்களால் அவர்களின் உடல் திறனில் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதன்மூலம் காவலர்களின் பணித்திறனும் பாதிக்கப்படுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவலர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு மொத்தமுள்ள 751 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு உடல் நிறை குறியீடு (பிஎம்ஐ) கணக்கிடுவதற்கான சிறப்பு முகாம் கடந்த வாரங்களில் நடத்தப்பட்டது. இதில், உடல் நிறை குறியீடு எண் 25-க்கு மேல் 377 பேர் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் காவலர் நலம், உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்த குறிப்பேடுகள் காவலர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும், காவலர்கள் தினமும் உடற்பயற்சியுடன் தங்களது உணவுப் பழக்கவழக்கங்களைக் குறிக்கவும், மாவட்ட அளவில் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தைக் கொடுக்கும் அதிகாரிகள், காவலர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும் என்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவித்துள்ளார்.

நவீன உடற்பயிற்சிக் கூடம்

இதன் தொடர்ச்சியாக காவலர்கள் தங்களின் உடல்நலனைப் பாதுகாக்க உடற்பயிற்சி மேற்கொள்ள வசதியாக ஆற்காடு நகர காவல் நிலையத்தில் ரூ.4 லட்சம் மதிப்பில் நவீன உடற்பயிற்சிக் கூடத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதனை வேலூர் சரக டிஐஜி காமினி இன்று (செப். 21) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், துணை காவல் கண்காணிப்பாளர் பூரணி, காவல் ஆய்வாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நவீன உடற்பயிற்சிக் கூடத்தை திறந்துவைத்த டிஐஜி காமினி.
நவீன உடற்பயிற்சிக் கூடத்தை திறந்துவைத்த டிஐஜி காமினி.

கேமரா கட்டுப்பாட்டு அறை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதத்தில் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொதுமக்கள் பங்களிப்புடன் பொருத்தப்பட்டு வருகின்றன. இதுவரை பொதுமக்கள் பங்களிப்புடன் 587 கேமராக்கள், காவல் துறையினர் பராமரிப்பின் மூலமாக 484 என மொத்தம் 1,071 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதில், ஆற்காடு நகரில் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.13 லட்சம் மதிப்பில் ஏற்கெனவே 169 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், நகரின் முக்கிய சாலைகளைக் கண்காணிக்கும் வகையில் 98 கண்காணிப்பு கேமராக்களை ஆற்காடு நகர காவல் நிலையத்தில் இருந்தபடி கண்காணிக்கும் வகையில் புதிதாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை வேலூர் சரக டிஐஜி காமினி இன்று (செப். 21)தொடங்கி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in