Published : 21 Sep 2020 03:31 PM
Last Updated : 21 Sep 2020 03:31 PM

வேளாண் சட்டத்தால் அதிக லாபம்; விவசாயிகள் மட்டுமே விலையை நிர்ணயிக்க முடியும்- பாஜக தலைவர் முருகன் பேட்டி

விவசாய சட்ட மசோதாவால் விவசாயிகள் மட்டுமே விலையை நிர்ணயிக்க முடியும், விவசாயிகளுக்கு அதிக லாபத்தை புதிய சட்டம் வழங்கும் என்று பாஜக மாநிலத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

''விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த நாடு இந்தியா. நாடாளுமன்றத்தில் 2 புதிய விவசாயச் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த மசோதாக்களை நிறைவேற்றிய பிரதமருக்கு நன்றி.

புதிய விவசாயச் சட்டத்தால் வரிகள் குறையும். நேரடி வர்த்தகம் ஊக்குவிக்கப்படும். வெளிநாடு, உள்நாட்டு ஏற்றுமதி அதிகரிக்கும். இந்த சட்டத்தால் இடைத் தரகர்கள் முறைக்கு வாய்ப்பு இல்லை. விளை பொருட்களைக் கள்ளச் சந்தையில் பதுக்க முடியாது. விவசாயிகளுக்கு அதிக லாபத்தை புதிய சட்டம் வழங்கும். விவசாய ஒப்பந்தம் உள்ளூர் மொழிகளில் இருக்கும்.

புதிய விவசாயச் சட்டத்தால் பாதிப்புக்கள் ஏற்பட்டால் அதனைத் தீர்க்க உள்ளுர் குழுக்கள் அமைக்கப்படுவதோடு மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் குறைகள் தீர்க்கப்படும். புதிய சட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என தவறாக பிரச்சாரம் செய்யபடுகிறது.

விளைவிக்கும் பொருட்களை உலக அளவில் சந்தைப்படுத்தவே புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் விவசாயிகள் மட்டுமே விலையை நிர்ணயிக்க முடியும். தமிழகத்தில் 41 லட்சம் விவசாயிகளுக்குக் கிஸான் திட்டம் கொடுக்கப்படுகிறது. கிஸான் திட்ட மோசடியில் தமிழக அரசு இன்னும் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அதிமுக - பாஜகவுக்கு இடையே எந்தவொரு மனக்கசப்பும் கிடையாது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இதே கூட்டணி தொடரும். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவரின் நிலைப்பாட்டை தொடர்ந்தே நடவடிக்கைகள் தெரியும்'' என்று எல்.முருகன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x