குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி; 4 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி; 4 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
Updated on
2 min read

வடமேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். அடுத்த 48 (21, 22/9) மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் .

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:

அவலாஞ்சி (நீலகிரி) 18 செ.மீ., மேல் பவானி (நீலகிரி) 12 செ.மீ., வால்பாறை (கோவை ), தேவலா (நீலகிரி) தலா 11 செ.மீ., சின்னக்கல்லாறு (கோவை) 10 செ.மீ., சின்கோனா (கோவை), சோலையாறு (கோவை) தலா 9 செ.மீ., பெரியாறு (தேனி), பந்தலூர் (நீலகிரி) தலா 6 செ.மீ., வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம் (கோவை ) 5 செ.மீ., கொட்டாரம் (கன்னியாகுமாரி), சிவலோகம் (கன்னியாகுமாரி), தேக்கடி (தேனி) தலா 4 செ.மீ., பாபநாசம் (திருநெல்வேலி) 3 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

செப்டம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 21 ,22 ஆகிய தேதிகளில் கேரளா, கர்நாடக , கோவா, மகாராஷ்டிரக் கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் .

செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று மகாராஷ்டிரக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் .

செப்டம்பர் 21 ஆம் தேதி அன்று வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் .

செப்டம்பர் 22 ஆம் தேதி அன்று தென்மேற்கு ,மத்திய மேற்கு , வட மேற்கு வங்கக் கடல் , மற்றும் அதனை ஒட்டிய தமிழக, ஆந்திர, ஒடிசா கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 21, 22 தேதிகளில் தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 25 ஆம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் உயர் அலை முன்னறிவிப்பு :

தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை செப்.22 இரவு 11:30 மணி வரை கடல் உயர் அலை 3.3 முதல் 3.9 மீட்டர் வரை எழும்பக்கூடும்”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in