Last Updated : 21 Sep, 2020 02:11 PM

 

Published : 21 Sep 2020 02:11 PM
Last Updated : 21 Sep 2020 02:11 PM

காவலர்களுக்கு பேரிடர்க் கால மீட்புப் பயிற்சி; நாகை மாவட்டத்தில் தொடக்கம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆயுதப் படைக் காவலர்களுக்கான பேரிடர் மீட்புப் பயிற்சி இன்று தொடங்கியது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழையையொட்டி பேரிடர்க் காலத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபடுவது தொடர்பாக, போலீஸாருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்ட ஆயுதப்படை மற்றும் சட்டம்- ஒழுங்கு காவலர்கள் 50 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.

5 நாட்கள் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சி இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கியது. சென்னையில் உள்ள அதிவிரைவுப் படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் தலைமையில் பயிற்சி பெற்ற 2 போலீஸார் இணைந்து காவலர்களுக்குப் பயிற்சி அளிக்கின்றனர்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.செல்வ நாகரத்தினம் மேற்பார்வையில் நடக்கும் இந்தப் பயிற்சியில் பேரிடர்க் காலத்தில் ஏற்படும் மின் விபத்து, மரம் விழுந்து ஏற்படும் விபத்து ஆகியவற்றைக் கையாள்வது மற்றும் தண்ணீரில் மூழ்கியவர்களைக் காப்பாற்றுவது, கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது உள்ளிட்டவை தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

மேலும், பேரிடர் மீட்புக் காலங்களில் பாதுகாப்பு உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் நேரில் பார்வையிட்டு, பயிற்சியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x