Published : 21 Sep 2020 10:27 AM
Last Updated : 21 Sep 2020 10:27 AM

மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு பொறுப்பு: கூடலூரில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து திரும்பியவர்களுக்கு மாவட்ட மற்றும் மாநில பொறுப்புகள் வழங்கியதை கண்டித்து, கூடலூரில் அதிமுகவினரே தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதிதாக மாவட்ட, மாநில அளவில் பதவி வழங்கப்பட்டவர்களின் பதவிகளை திரும்பப்பெறக் கோரியும், மாவட்ட அதிமுக நிர்வாகத்தை கண்டித்தும், நீலகிரி மாவட்டம் கூடலூர் பழைய பேருந்து நிலையப் பகுதியில், நூற்றுக்கணக்கான அதிமுகவினர் நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, கட்சியில் விசுவாசமாக உழைத்தவர்களுக்கு பதவி வழங்காமல், கட்சிதாவி வருபவர்களுக்கு பதவிவழங்குவதை கண்டித்து இந்தப்போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், முதல்வர் பழனிசாமி உதகை வரும்போது மாவட்ட அளவில் போராட்டம் நடத்தப்படும். அதிலும் உரிய தீர்வு இல்லாவிட்டால், சென்னையில் ஜெயலலிதா நினைவிடத்தில் திரண்டு போராட்டம் நடத்தப்படும்" என்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தால்,கூடலூர் - கள்ளிக்கோட்டை சாலைசந்திப்பு பகுதியில் ஒரு மணி நேரம்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அனுமதியின்றி போக்குவரத்து பாதிக்கும் வகையில்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x