Published : 21 Sep 2020 07:43 AM
Last Updated : 21 Sep 2020 07:43 AM

தனிப்பட்ட புகாரை விசாரிக்க முன்அனுமதி தேவையில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவு: அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு

சென்னை

அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான தனிப்பட்ட குற்றச்சாட்டை விசாரித்து நடவடிக்கை எடுக்க முன்அனுமதி தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வேலூரைச் சேர்ந்த ராமமூர்த்தி, ஜெயப் பிரகாஷ் சென்னை உயர் நீதிமன்றத் தில் தாக்கல் செய்திருந்த மனு:

வேலூர் பேருந்து நிலையம் அருகே சுந்தர்ராஜன் என்பவரது ரூ.225 கோடி நிலத்தை 2010-ல் குத்தகைக்கு எடுத்து சைக்கிள் ஸ்டாண்ட் நடத்தி வந்தோம். அமைச்சர் வீரமணி எங்களை சட்டவிரோதமாக அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சிகள் செய்தார். அமைச்சருக்கு எதிராக போலீஸில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சட்டப் பேரவைச் செயலாளர், அரசு கொறடா, முதல்வருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கோரியிருந் தனர்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு பிறப்பித் துள்ள உத்தரவில், ‘‘தனியார் நிலம் பிரச்சினையில் அமைச்சர் வீரமணியின் தலையீடு தனிப்பட்ட முறையில்தான் நடந்துள்ளதே தவிர, அரசு ரீதியாகவோ, அமைச்சர் என்ற அடிப்படையிலோ இல்லை. எனவே, நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவைச் செயலர் அல்லது அரசு கொறடாவின் முன்அனுமதி தேவையில்லை’’ எனக் கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு கூறியதாவது:

அரசியலமைப்பு சட்டப்படி குடியரசுத் தலைவர், ஆளுநர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு மட்டுமே விதிவிலக்கு உள்ளது. மற்ற அனைவரும் சட்டத்தின்முன் சமமானவர்களே. பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் மீது குற்றவியல் ரீதியாகவோ அல்லது உரிமையியல் ரீதியாகவோ நடவடிக்கை எடுக்க சட்ட ரீதியாக எந்த முன்தடையும் கிடையாது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது காங்கிரஸ் அரசாங்கம் கோதுமை ஊழல் தொடர்பாக ஊழல் தடுப்புச்சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தபோது பொது ஊழியர் என்ற வரையறை முதல்வருக்கும் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

பல மாநிலங்களில் குற்றச் சாட்டுக்கு உள்ளான அமைச்சர்கள், பதவியில் இருக்கும்போதே சட்ட ரீதியாக தண்டிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் என்பதற்காக அவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படவில்லை. இதைத்தான் அமைச்சர் கே.சி.வீரமணி விவகாரத்தில் உயர் நீதிமன்றமும் சுட்டிக் காட்டியுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x