Published : 21 Sep 2020 07:33 AM
Last Updated : 21 Sep 2020 07:33 AM

தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் முதல்வர் ஆய்வுக் கூட்டம் ஒத்திவைப்பு: பிரதமருடன் கலந்தாய்வில் பங்கேற்பதால் மாற்றம்

பிரதமர் நடத்தும் காணொலி கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதால், வரும் 22, 23-ம் தேதிகளில் முதல்வர் பங்கேற்க இருந்த 3 மாவட்ட ஆய்வுக் கூட்ட நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முதல்வர் பழனிசாமி மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற் கொண்டு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் பற்றியும் மாவட்ட ஆட்சியர், அனைத்து துறை அரசு அலுவலர் களுடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்தந்த மாவட்டங் களில் நிறைவடைந்த திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பல்வேறு துறைகள் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

மாவட்டத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பின் நிர்வாகிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுடன் கலந் தாய்வு மேற்கொண்டு வருகிறார். இதுவரை 24 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆய்வுப் பணியை மேற்கொண்டுள்ளார்.

வரும் 22-ம் தேதி காலை ராமநாதபுரம், மதியம் தூத்துக்குடி, 23-ம் தேதி காலை கன்னியாகுமரி, மதியம் விருது நகர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாநில முதல்வர்களுடன் பிரதமர் வரும் 23-ம் தேதி காணொலி மூலம் கலந்தாய்வுக் கூட்டம் நடத்த உள்ளார். இதில் முதல்வர் பழனிசாமி கலந்துகொள்ள இருப்பதால், முதல்வரின் சுற்றுப்பயண நிகழ்ச்சியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 22-ம் தேதி (நாளை) ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் மட்டும் முதல்வர் பங்கேற்கிறார். மற்ற 3 மாவட்டங்களில் நடக்க இருந்த ஆய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆய்வு நடைபெறுவது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்.

முதல்வர் 21-ம் தேதி (இன்று) சென்னையில் இருந்து விமானத் தில் மதுரை சென்றடைந்து, மதுரையில் தங்குகிறார். 22-ம் தேதி காலை மதுரையில் இருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக ராமநாதபுரம் சென்று, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். அன்று மாலை மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை திரும்புகிறார்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x