Published : 20 Sep 2020 08:14 PM
Last Updated : 20 Sep 2020 08:14 PM

கிரெடிட் கார்டு மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் இழந்த பணத்தை 24 மணி நேரத்தில் மீட்ட போலீஸார் 

சென்னை

அம்பத்தூர் மற்றும் வண்ணாரப்பேட்டை சைபர் குற்றப்பிரிவினரின் துரித நடவடிக்கையின் காரணமாக, கிரெடிட் கார்டிலிருந்து திருடப்பட்ட பணம் 24 மணி நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு மீட்டுத்தரப்பட்டது.

சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த துருவி சன்யாசி ராவ் (51) என்பவர் இணையதளத்தில் தனியார் நிறுவனத்தின் சேவை மையம் குறித்து ஆராய்ந்து கொண்டிருந்தபோது, வாடிக்கையாளர் சேவை போல இணையத்தில் வந்த அறிவிப்பில் துருவி சன்யாசி ராவுக்கு உதவுவதாக கூறி, Team viewer Quick support app என்ற இணைப்பு வந்துள்ளது.

அதனை கிளிக் செய்து, அவரது விவரங்கள் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை உள்ளீடு செய்யுமாறு சம்பந்தப்பட்டவர்கள் கூறியதன்பேரில், அவர் தனது விபரங்களை பதிவேற்றியுள்ளார். சில நிமிடங்களில் துருவி சன்யாசிராவுக்கு அவரது சிட்டி பேங்க் கிரெடிட் காரிடிலிருந்து ரூ.,39,998 எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த, துருவி சன்யாசிராவ் இது குறித்து அம்பத்தூர் துணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் பிரிவில் புகார் அளித்தார். புகாரின் பேரில், அம்பத்தூர் காவல் மாவட்ட சைபர் குற்றப்பிரிவினர் விசாரணை நடத்தினர்.

அம்பத்தூர் சைபர் குற்றப்பிரிவினர் விசாரணை செய்ததில், புகார்தாரர் கூறியது உண்மையென தெரிவந்ததின்பேரில், பணபரிவர்த்தனை நடந்த சிட்டி வங்கிக்கு, தொடர்பு கொண்டு புகார்தாரரின் அனுமதியின்றி முறைகேடாக பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், புகார்தாரருக்கு மோசடி செய்த பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுத்தனர்.

இதன்பேரில், சிட்டி வங்கி நிர்வாகம், புகார்தாரர் துருவி சன்யாசிராவவின் வங்கி கணக்கிற்கு, ரூ.19,999/- செலுத்தினர். வங்கி நிர்வாகத்திடம் இருந்து 24 மணி நேரத்தில் பணம் பெற்றுத் தந்த வண்ணாரப்பேட்டை சைபர் குற்றப்பிரிவு போலீஸாருக்கு பாதிக்கப்பட்ட துருவி சன்யாசராவ் நன்றி தெரிவித்தார்.

சென்னையைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு நேற்று முன் தினம் (17/9) அன்று அவர் பயன்படுத்தி வரும் Standard Chartered வங்கியின் கிரெடிட் கார்டிலிருந்து (AUD 190.38 + EURO 5.00) இந்திய மதிப்பில் ரூ.10,661/- எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. உடனே, செல்வராஜ் வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து வண்ணாரப்பேட்டை சைபர் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், செல்வராஜின் மேற்படி கிரெடிட் கார்டிலிருந்து ஆஸ்திரேலியா, மெல்போர்னிலிருந்து (AUD 190.38 + EURO 5.00) இந்திய மதிப்பில் ரூ.10,661/- எடுக்கப்பட்டது தெரியவந்தது.

உடனே, வண்ணாரப்பேட்டை சைபர் குற்றப்பிரிவினர் பணபரிவர்த்தனை நடந்த Standard Chartered வங்கிக்கு, தொடர்பு கொண்டு புகார்தாரரின் அனுமதியின்றி முறைகேடாக பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், புகார்தாரருக்கு மோசடி செய்த பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் எனவும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுத்ததின்பேரில், மேற்படி வங்கி நிர்வாகம், புகார்தாரர் செல்வராஜின் வங்கி கணக்கிற்கு, மோசடி செய்யப்பட்ட பணம் ரூ.10,661/- திரும்ப அளித்தனர்.

வாடிக்கையாளர்களை ஏமாற்றி கிரெடிட் கார்டில் பறிக்கப்பட்ட பணத்தை மீட்ட போலீஸாருக்கு பாதிக்கப்பட்டவர்கள் நன்றி தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x