Published : 20 Sep 2020 02:49 PM
Last Updated : 20 Sep 2020 02:49 PM

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: நீலகிரி, கோவையில் மிக கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

வடகிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிகக் கன மழையும் ஓரிரு இடங்களில் அதி கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய செய்திக்குறிப்பு வருமாறு:

“ வடகிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் ஓரிரு இடங்களில் அதி கன மழை பெய்யும்.

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்

அடுத்த 48 (20,21/09) மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் .

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்:

அவலாஞ்சி (நீலகிரி ) 21 செ.மீ, பந்தலூர் (நீலகிரி ) 14 செ.மீ, மேல் பவானி (நீலகிரி ) 13 செ.மீ, வால்பாறை (கோவை ) 12 செ.மீ, ஹாரிசன் எஸ்டேட் (நீலகிரி) தேவலா (நீலகிரி ) தலா 11 செ.மீ, சின்கோனா (கோவை ) 10 செ.மீ,

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 22 வரை மன்னார் வளைகுடா பகுதிகள் பலத்த காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 21 வரை கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் .

செப்டம்பர் 20,21 தெற்கு வங்கக்கடல், மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்ககடல் மற்றும் அந்தமான், வடக்கு வங்ககடல் பகுதிகளில் சூறாவளி காற்று 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
செப்டம்பர் 22 அன்று தென்மேற்கு ,மத்திய மேற்கு மற்றும் வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 23 வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் உயர்அலை முன்னறிவிப்பு : தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி செப். 21 அன்று இரவு 11:30 மணி வரை கடல் உயர்அலை 3.5 முதல் 4.2 மீட்டர் வரை எழும்பக்கூடும்”.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x