Published : 20 Sep 2020 01:28 PM
Last Updated : 20 Sep 2020 01:28 PM

கார் சாகுபடியை கைவிட்ட நிலையில் தென்காசியில் பிசான சாகுபடி பணி தொடக்கம்

மேலகரம் அருகே நெல் சாகுபடிக்கு நிலத்தை உழுது தயார் செய்யும் பணி நடைபெறுகிறது.

தென்காசி

கார் சாகுபடியை கைவிட்ட நிலையில் தென்காசி மாவட்ட விவசாயிகள் பிசான நெல் சாகுபடி பணியை முன்கூட்டியே தொடங்கியுள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறித்த காலத்தில் தொடங்கியது. இருப்பினும் ஜூன், ஜூலை மாதங்களில் போதிய மழை பெய்யவில்லை. அணைகள், குளங்களில் நீர்மட்டம் போதிய அளவு இல்லாததால் கார் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டன. அடவிநயினார், கருப்பாநதி, கடனாநதி, ராமநதி அணைப் பாசன நிலங்களில் பெரும்பாலான விவசாயிகள் கார் சாகுபடி பணியை கைவிட்டனர். ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தொடர் மழை பெய்ததால் தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 அணைகளிலும் நீர்மட்டம் உயர் ந்தது. குளங்களுக்கும் நீர்வரத்து கிடைத்தது.

கார் சாகுபடி ஏமாற்றம் அளித்த நிலையில், பிசான சாகுபடியை முன்கூட்டியே தொடங்க விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மேலகரம், நன்னகரம், சிந்தாமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குளங்களில் தண்ணீர் இருப்பதால், பிசான சாகுபடி கைகொடுக்கும் என நம்புகின்றனர். இதேபோல், அடவிநயினார், கருப்பாநதி உள்ளிட்ட அணைப் பாசனங்களில் உள்ள விவசாய நிலங்களிலும் நாற்றங்கால் தயார் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். விதைப்பு பணி சில நாட்களில் விறுவிறுப்படையும் என்பதால், விதைநெல் வாங்கி வியாபாரிகள் இருப்பு வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x