Published : 20 Sep 2020 07:36 AM
Last Updated : 20 Sep 2020 07:36 AM

தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம்: அக்.1 முதல் தொடக்கம் அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்

திருவாரூர்

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் அக்.1-ம் தேதி முதல் தமிழகத்தில் தொடங்கப்படும் என்று மாநில உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற உழவர் உற்பத்தியாளர் அமைப்புக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் புதிய ஆம்புலன்ஸ் சேவை தொடக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் அக்.1-ம் தேதி முதல் தமிழகத்தில் தொடங்கப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு அமல்படுத்தாது. அதனால்தான் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களை நிறைவேற்றாமல் பாதுகாக்கும் வகையில், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதல்வர் அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் விவசாயம் தொடர்பாக 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதல் ஏற்கெனவே தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ள திட்டம். இதன் மூலம் விவசாயிகள் விளைவிக்கும் பொருளை எங்குவேண்டுமானாலும் விற்பனை செய்யலாம் என்ற நிலை நடைமுறையில் உள்ளது. மேலும் வேளாண் பொருட்களான உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவற்றை வைத்திருந்து சற்று கூடுதல் விலை கிடைக்கும்போது விவசாயிகள் விற்பனை செய்யலாம் என்பதற்கான மசோதாவும் நிறைவேறியுள்ளது.

அதேநேரத்தில் விவசாயிகளுக்கு எதிராக வணிகர்கள் விலை உயர்வை ஏற்படுத்தினால் அரசு தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்வதற்கான மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, “ஆட்டம் முடியும், 6 மாதத்தில் விடியும்” என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஸ்டாலின் சொல்வது எல்லாம் பகல் கனவாகவே முடியும். அதிமுக ஆட்சியே, 2021 தேர்தலுக்குப் பின்னரும் அமையும்” என்று அமைச்சர் ஆர்.காமராஜ் பதில் அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x