Published : 20 Sep 2020 07:28 AM
Last Updated : 20 Sep 2020 07:28 AM
தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 24 சதவீதம் அதிக மழை பெய்திருப்பதால், நிலத்தடி நீர்மட்டம் சராசரியாக 3 மீட்டர் உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வாரியத்தின் மேலாண் இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்மேற்கு பருவமழைக் காலத்தில் செப்டம்பர் 19-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் சராசரியாக 402 மிமீ மழை கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 323 மிமீ மழை கிடைத்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 24 சதவீதம் அதிகமாக மழை கிடைத்துள்ளது. இதே காலகட்டத்தில் வழக்கமாக 370 மிமீ மழை கிடைக்கும். இந்த ஆண்டுவழக்கத்தை விட 9.5 சதவீதம் அதிகமாக மழை கிடைத்துள்ளது.
ஓராண்டில் வழக்கமாக தமிழகம் பெறும் 985 மிமீ மழையில் 41 சதவீதம் தென்மேற்கு பருவமழை காலத்திலேயே கிடைத்துள்ளது.
தமிழ்நாடு குடிநீர் வாரியம் சார்பில், சென்னை தவிர்த்து இதர மாவட்டங்கள் முழுவதும் 1,286 கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறது. பருவமழை தொடங்குவதற்கு முன்பாக கடந்த மே மாதம் எடுக்கப்பட்ட அளவின்படி சராசரியாக நிலத்தடி நீர்மட்டம் 17.3 மீட்டர் ஆழத்தில் இருந்தது. இந்த ஆண்டு அதிக மழை கிடைத்திருப்பதால், சுமார் 3 மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, 14 மீட்டர் ஆழத்தில் உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நிலத்தடி நீர்மட்டம் 16.3 மீட்டர் ஆழமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது மாநிலம் முழுவதும் 556 குடிநீர் திட்டங்கள், 17அணைகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மொத்த அணைகளிலும் சேர்த்து தற்போது127 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்திருப்பதால், இந்த ஆதாரங்களைக் கொண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை மாநில நீர்த் தேவையை சமாளிக்க முடியும்.
தமிழகம் மழை மறைவு பிரதேசமாக இருப்பதால் மழைகுறைவாக கிடைக்கிறது. இங்குவற்றாத ஆறுகள் ஏதும் இல்லை.இருக்கும் வளத்தைக் கொண்டு,தேவையை பூர்த்தி செய்துகொள்ள வேண்டியுள்ளது. எனவே தமிழக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்புகட்டமைப்புகளை ஏற்படுத்தி கிடைக்கும் மழைநீரை சேமிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT