கருணை வேலை வழங்குவதில் தாமதம் கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுரை

கருணை வேலை வழங்குவதில் தாமதம் கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுரை
Updated on
1 min read

பணியிலிருக்கும் போது உயிரிழக்கும் அரசு ஊழியரின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை வேலை வழங்குவதில் தாமதம் செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் சாயல்குடி வேம்பாரைச் சேர்ந்த பவானி மணிமாரி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

என் தாயார் தமிழ்பொன்மணி, அரசு உதவி பெறும் கன்னிராஜபுரம் ஷத்ரிய நாடார் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். பணியில் இருந்த போது கடந்த 26.9.1999-ல் தாயார் இறந்தார். இதனால், எனக்கு கருணை வேலை கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால் காலிப்பணியிடம் இல்லை என்று கூறி எனது விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்தனர். அதை ரத்து செய்து எனக்கு கருணை வேலை வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் கருணை வேலை கேட்டு அனுப்பிய மனுவை அதிகாரிகள் கருணை வேலை தொடர்பான அரசாணையை தவறாக புரிந்து கொண்டு நிராகரித்துள்ளனர். இதனால் மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

மனுதாரரின் தந்தை மனுதாரருக்கு கருணை வேலை கேட்டு 2000-ம் ஆண்டிலேயே மனு அளித்துள்ளார். மனு அளிக்கப்பட்டு 20 ஆண்டுக்கு மேலாகிவிட்டது. பணியின் போது இறக்கும் ஊழியரின் திடீர் மறைவால் அந்தக் குடும்பம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே குடும்பத்தில் ஒருவருக்கு கருணை வேலை வழங்கப்படுகிறது.

இதனால் கருணை பணி நியமனங்களில் தாமதம் செய்யக்கூடாது. மனுதாரருக்கு கருணை வேலை வழங்குவது அவரது குடும்பத்துக்கு ஒளியேற்றுவதாக அமையும்.

எனவே மனுதாரருக்கு அவரது கல்வித்தகுதிக்கு ஏற்ற பணியை 4 வாரத்தில் வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in