Published : 19 Sep 2020 06:45 PM
Last Updated : 19 Sep 2020 06:45 PM

மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு: கயத்தாறு அருகே குளத்தில் இறங்கி கிராம மக்கள் போராட்டம்

கயத்தாறு அருகே தலையால்நடந்தான்குளம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்ததைத் தொடர்ந்து, மின்கம்பங்களை சீரமைக்க வலியுறுத்தி அங்குள்ள குளத்தில் இறங்கி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கயத்தாறு அருகே தெற்கு மயிலோடை ஊராட்சி தலையால் நடந்தான்குளம் கிராமத்தைச் சேர்ந்த முண்டசாமி மகன் பாலமுருகன் (27). விவசாயியான இவருக்கு திருமணமாகி அபிராமி என்கிற மனைவி, மேனகா(3) என்ற மகள் உள்ளனர்.

நேற்று காலையில் பாலமுருகன் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சும்போது எதிர்பாரதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

பாலமுருகன் உயிரிழப்புக்கு மின்சார வாரியம் காரணம். தோட்டத்துக்கு செல்லும் மின் கம்பங்கள் எல்லாம் உடைந்து காங்கீரிட் கம்பிகள் வெளியே தெரிகின்றன.

சேதமடைந்து காணப்படும் மின்கம்பங்களை உடனடியாக மாற்ற வேண்டும். உயிரிழந்த பாலமுருகன் குடும்பத்துக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தலையால்நடந்தான்குளம் கிராம மக்கள் அங்குள்ள குளத்தில் இறங்கி காத்திருப்பு போராட்டம் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் மின்வாரியத்தை கண்டித்தும், பாலமுருகன் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் கோஷங்கள் முழங்கினர்.

தகவலறிந்து கயத்தாறு காவல் ஆய்வாளர் முத்து, உதவி ஆய்வாளர் அரிக்கிருஷ்ணன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.

தொடர்ந்து, கிராம மக்களுடன் கயத்தாறு காவல் நிலையத்தில் டி.எஸ்.பி. கலைகதிரவன், வட்டாட்சியர் பாஸ்கரன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கூட்டத்தில், கிராம மக்கள் தங்களது கோரிக்கைகள் மனுவாக எழுதி கொடுத்தால், உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனை கிராம மக்கள் ஏற்றுக்கொண்டு கலைந்து சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x