செப்.20-ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி; கோவை, நீலகிரியில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

செப்.20-ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி; கோவை, நீலகிரியில் கனமழை: வானிலை ஆய்வு மையம்
Updated on
2 min read

வடகிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வரும் 20-ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், வட கடலோரத் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், வட கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:

ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), தாமரைப்பக்கம் (திருவள்ளூர்), புழல் (திருவள்ளூர்), பூண்டி (திருவள்ளூர்) தலா 9 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), மாம்பலம் (சென்னை), பொன்னேரி (திருவள்ளூர்), சென்னை விமான நிலையம் (காஞ்சிபுரம்) தலா 8 செ.மீ., ஆலந்தூர் (சென்னை), பெரம்பூர் (சென்னை), தரமணி (காஞ்சிபுரம்), செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்), செம்பரம்பாக்கம் ARG (திருவள்ளூர்), சோழவரம் (திருவள்ளூர்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) தலா 7 செ.மீ., சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), திருத்தணி (திருவள்ளூர்), தாம்பரம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு ) தலா 6 செ.மீ.

வடகிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வரும் 20-ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

செப்டம்பர் 19 முதல் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 19 முதல் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 19 ஆம் தேதி (இன்று) தெற்கு வங்கக்கடல், மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 20 அன்று தெற்கு வங்கக்கடல், மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 21 தென்மேற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு வங்கக்கடலில் சூறாவளிக் காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 22 மத்திய மேற்கு வங்கக்கடல் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் உயர் அலை முன்னறிவிப்பு:

தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி செப்.20 ஆம் தேதி இரவு 11:30 மணி வரை கடல் உயர் அலை 3.5 முதல் 4.2 மீட்டர் வரை எழும்பக்கூடும்.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in