Last Updated : 19 Sep, 2020 01:25 PM

 

Published : 19 Sep 2020 01:25 PM
Last Updated : 19 Sep 2020 01:25 PM

புதுச்சேரியில் 22 ஆயிரத்தைக் கடந்த கரோனா தொற்று: புதிதாக 543 பேர் பாதிப்பு; மேலும் 11 பேர் உயிரிழப்பு

புதுச்சேரியில் இன்று புதிதாக 543 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆயிரத்து 456 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 448 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று (செப். 19) கூறியதாவது:

"புதுச்சேரியில் 5,159 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், தற்போது புதுச்சேரியில் 425, காரைக்காலில் 84, ஏனாமில் 28, மாஹேவில் 6 என மொத்தம் 543 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் 8 பேர், காரைக்காலில் 3 பேர் என 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 448 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 2 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 22 ஆயிரத்து 456 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் புதுச்சேரியில் 2,484 பேர், காரைக்காலில் 391 பேர், ஏனாமில் 120 பேர், மாஹேவில் 6 என 3,001 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,439 பேர், காரைக்காலில் 103 பேர், ஏனாமில் 219 பேர், மாஹேவில் 37 பேர் என மொத்தம் 1,798 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,799 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் புதுச்சேரியில் 377 பேர், காரைக்காலில் 67 பேர், ஏனாமில் 49 பேர், மாஹேவில் ஒருவர் என மொத்தம் 494 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை நிலையில் 17 ஆயிரத்து 209 (76.63 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 1 லட்சத்து 30 ஆயிரத்து 99 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 1 லட்சத்து 1,462 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தின் மொத்த மக்கள்தொகை 15 லட்சமாகும். இதில் 10 சதவீதம் பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை எடுக்கும் பணி இன்னும் 4 நாட்களில் முடிகிறது.

நம்முடைய சுகாதாரத்துறை சார்பில் கடந்த 5 ஆம் தேதி முதல் நேற்று வரை 52 ஆயிரத்து 72 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதில், 30 ஆயிரத்து 390 பேருக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது. 6,535 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 168 பேர் உயிரிழந்துள்ளனர்.

இப்போது அதிக அளவு பரிசோதனைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தொற்று சதவீதம் குறைந்து வருகிறது. முன்பு மத்திய அரசின் வழிமுறைகளின்படி அறிகுறிகள் இருந்தவர்களுக்கு மட்டும் ஏஎன்எம், ஆஷா பணியாளர்கள் மூலம் வீடு, வீடாகச் சென்று உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் 45 சதவீதம் வரை தொற்று இருந்தது. இப்போது அனைவருக்கும் பரிசோதனை எடுக்கப்படுகிறது. இதனால் அந்த சதவீதம் குறைந்துள்ளது.

நம்முடைய அரசு மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் சிறப்பான முறையில் பணி செய்து வருகின்றனர். இன்னும் எந்தனை நாட்கள் கரோனா இருக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. அதற்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள், தேவையான ஆட்கிகள் இருப்பில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் மத்தியில் முன்பு இருந்த ஒத்துழைப்பு தற்போது இல்லை.

மத்திய அரசு ஊரடங்கு தளர்வு அளித்த பின்னர், மக்கள் அனைவரும் எப்போதும்போல் இருக்கின்றனர். எனவே, பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளைச் சுத்தம் செய்வதை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்".

இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x