Last Updated : 19 Sep, 2020 12:34 PM

 

Published : 19 Sep 2020 12:34 PM
Last Updated : 19 Sep 2020 12:34 PM

சாத்தான்குளம் இளைஞர் கொலை விவகாரம்: தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்- 3-வது நாளாக உறவினர்கள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே காரில் கடத்தி இளைஞர் த. செல்வன் (32) என்பவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். நெல்லை சரக டிஐஜி பிரவீண் குமார் அபிநபு இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

ஆனால், இந்த வழக்கில் தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், அதிமுக நிர்வாகி திருமணவேல் உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும். 3 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் வீடியோ பதிவுடன் செல்வன் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும். செல்வனின் குடும்பத்துக்கு தமிழக அரசு உரிய நிவாரண உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி செல்வனின் உறவினர்கள் மூன்றாவது நாளாக உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.

நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த தனிஸ்லாஸ் மகன் செல்வம் (32). கூலித் தொழிலாளி. இவர், கொழுந்தட்டு கிராமத்திலிருந்து ஊருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கடத்திச் சென்றுள்ளது.காரில் வைத்து அவரை உருட்டுக்கட்டையால் பலமாக தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த செல்வத்தை, கடக்குளம் காட்டுப்பகுதியில் கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்த செல்வத்தை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

சொத்துத் தகராறு காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.மேலும், இதில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உட்பட மேலும் சிலர் மீது (107, 336, 302, 364 ) கொலை வழக்கு உட்பட 4 பிரிவுகளில் நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்பாக 3 பேர் சிக்கிய நிலையில், அதிமுக பிரமுகர் திருமணவேல் இன்னும் கைது செய்யப்படவில்லை. அதேபோல், காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனும் கைது செய்யப்படவில்லை. அவர் பனியிட மாறுதல் மட்டுமே செய்யப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x