Last Updated : 18 Sep, 2020 06:12 PM

 

Published : 18 Sep 2020 06:12 PM
Last Updated : 18 Sep 2020 06:12 PM

கண்டதேவி இரு தரப்பு மோதலில் 17 பேர் மீதான நடவடிக்கை ரத்து 

மதுரை

கண்டதேவியில் சர்ச்சைக்குரிய இடத்தில் கொட்டகை அமைத்தது தொடர்பான மோதலில் 17 பேருக்கு உத்தரவாத பத்திரம் அளிக்கக்கோரி தேவகோட்டை கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

சிவகங்கை மாவட்டம் கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தெப்பக்குளம் அருகே உள்ள பட்டா நிலத்தை பயன்படுத்துவதில் இரு தரப்பு இடையே நீண்டகாலமாக பிரச்சினை உள்ளது.

இந்த நிலத்தில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக்கூடாது என ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற கிளையும் தடையாணை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் அந்த நிலத்தில் ஒரு தரப்பினர் தகர கொட்டகை அமைத்து மின் இணைப்பு பெற்றனர். அந்த கொட்டகையை மற்றொரு தரப்பினர் 13.5.2015-ல் பிரித்தனர். இதையடுத்து இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து இரு தரப்பினருக்கும் உங்கள் மீது ஏன் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தாக கூறி நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு தேவகோட்டை கோட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பினார்.

அந்த நோட்டீஸுக்கு ஏ தரப்பு உயர் நீதிமன்ற கிளையில் தடையாணை பெற்றது. பி தரப்பினரிடம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி, அனைவரும் ஒரு ஆண்டுக்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கமாட்டோம் என ரூ.50 ஆயிரம் மதிப்புக்கு உத்தரவாத பத்திரம் அளிக்க வேண்டும் என 27.7.2020-ல் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ராஜ்குமார் உட்பட 17 பேர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இதனை நீதிபதி ஆர்.தாரணி விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் ஜி.தாளைமுத்தரசு வாதிடுகையில், கோட்டாட்சியர் ஒரு தரப்பினர் மீது மட்டுமே நடவடிக்கை எடுத்துள்ளார்.

மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பு வழங்காமல் கோட்டாட்சியர் உத்தரவாத பத்திரம் சமர்பிக்க உத்தரவிட்டுள்ளார். பி தரப்பில் 6 பேர் ஆஜராகவில்லை. அவர்களும் உத்தரவாத பத்திரம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம் என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

கோட்டாட்சியர் நோட்டீஸூக்கு ஏ தரப்பு உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள்ளது. அதே நோட்டீஸ் அடிப்படையில் பி தரப்பினர் மீது கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டிருக்கக்கூடாது. பி தரப்பினர் மீதான நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியருக்கு உயர் நீதிமன்றம் சிறப்பு அனுமதி வழங்கவில்லை. எனவே கோட்டாட்சியர் 27.7.2020-ல் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x