Last Updated : 18 Sep, 2020 05:55 PM

 

Published : 18 Sep 2020 05:55 PM
Last Updated : 18 Sep 2020 05:55 PM

சென்னைக் குடிநீருக்காக கண்டலேறு அணையிலிருந்து விநாடிக்கு 1,500 கன அடி கிருஷ்ணா நீர் திறப்பு  

சென்னைக் குடிநீருக்காக, கண்டலேறு அணையிலிருந்து, இன்று காலை விநாடிக்கு 1,500 கன அடி கிருஷ்ணா நீரை ஆந்திர அரசு திறந்தது.

தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, ஆந்திர அரசு, கண்டலேறு அணையிலிருந்து, சென்னைக்குக் குடிநீர் தேவைக்காக இரு தவணைகளாக 12 டிஎம்சி கிருஷ்ணா நீர் வழங்க வேண்டும். ஆனால், கண்டலேறு அணையின் நீர் இருப்பு குறைவால் நடப்பாண்டுக்கான முதல் தவணை கடந்த ஜூலை தொடங்கியும், அணையிலிருந்து நீர் திறக்கப்படவில்லை.

இச்சூழலில், தென்மேற்குப் பருவமழையால், ஆந்திராவின் ஸ்ரீசைலம் அணை நிரம்பியதால், கிருஷ்ணா நீர், சோமசீலா மற்றும் கண்டலேறு அணைகளுக்குச் சென்று கொண்டிருக்கிறது.

இதற்கிடையே, கடந்த மாதம் 29-ம் தேதி ஆந்திர மாநிலம், திருப்பதியில் நடைபெற்ற தெலுங்கு கங்கை திட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு கூட்டத்தில், "சென்னைக்குக் குடிநீர் தேவைக்காக, நடப்பு ஆண்டுக்கான கிருஷ்ணா நீரைக் கண்டலேறு அணையிலிருந்து திறக்க வேண்டும்" என, தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர்.

அதனை ஏற்ற ஆந்திர அதிகாரிகள், "செப்டம்பர் 2-ம் வாரத்தில் சென்னைக்குக் குடிநீருக்காக கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறக்கப்படும்" எனத் தெரிவித்தனர். ஆனால், சென்னைக்குக் குடிநீருக்காக கண்டலேறு அணையிலிருந்து, கிருஷ்ணா நீரைத் திறக்க ஆந்திர அரசு அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கண்டலேறு அணையிலிருந்து, கிருஷ்ணா நீரைத் திறக்க ஆந்திர அரசு அளித்த அனுமதி அளித்துள்ளது. ஆகவே, சென்னைக்குக் குடிநீருக்காக கண்டலேறு அணையிலிருந்து, இன்று (செப். 18) காலை 9 மணியளவில் கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது.

இந்நிகழ்வில், ஆந்திர அரசின் தெலுங்கு கங்கை திட்ட தலைமைப் பொறியாளர் ஹரிநாராயண ரெட்டி பங்கேற்று, சென்னைக் குடிநீருக்காக கண்டலேறு அணையிலிருந்து விநாடிக்கு 1,500 கன அடி கிருஷ்ணா நீரைத் திறந்துவிட்டார். இதில், ஆந்திர பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் கிருஷ்ணா குடிநீர் வழங்கும் திட்ட கோட்டம் -1 இன் செயற்பொறியாளர் மரிய ஹென்றி ஜார்ஜ் உள்ளிட்ட தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

"கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நீரின் அளவு, படிப்படியாக 2,000 கன அடி வரை அதிகரிக்கப்படும். கிருஷ்ணா நீர், கண்டலேறு அணையிலிருந்து 152 கி.மீ., தொலைவில் உள்ள தமிழக எல்லையான, ஊத்துக்கோட்டை அருகே தாமரைக்குப்பத்தில் உள்ள ஜீரோ பாயிண்டுக்கு, வரும் 21-ம் தேதி வந்தடையும் என எதிர்பார்க்கிறோம்" என, தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x