Published : 18 Sep 2020 04:12 PM
Last Updated : 18 Sep 2020 04:12 PM

சிலை கடத்தல் தொடர்பான மாயமான ஆவணங்கள்; ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியை கொண்டு விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை; சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை

திறமையான அதிகாரிகளுக்கு காவல்துறையில் பற்றாக்குறையில்லை என்பதால், சிலை கடத்தல் தொடர்பான மாயமான ஆவணங்கள் குறித்து ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியை கொண்டு விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் சிலை கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் ஆவணங்கள் காணாமல் போனது தொடர்பாக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியை நியமித்து, உயர் நீதிமன்ற மேற்பார்வையில் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் நடைபெற்று வரும் நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங் சார்பில் இன்று (செப்.18) அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், மாயமான ஆவணங்களை கண்டறிய காவல் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, காணாமல் போனதாகக் கருதப்பட்ட 41 வழக்குகளின் ஆவணங்களில், 23 வழக்குகளின் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை மாவட்ட காவல் துறையினரால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 18 வழக்குகளின் ஆவணங்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை மாவட்ட காவல் துறையினர் மேற்கொண்டு வருவதாகவும், காவல் நிலையங்கள், வழக்குக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள், புகார்தாரர்கள், கோயில் அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் என வாய்ப்புள்ள எல்லா இடங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டத்திற்கு உட்பட்டு தங்களது கடமையை திறம்பட செய்து வரக்கூடிய காவல்துறை அதிகாரிகளுக்கு எந்த பற்றாக்குறையும் இல்லாததால், காணாமல் போன சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை கண்டறிய ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியை நியமிக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை எனவும் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x